குதிரை வாகனத்தில் பொன்னர் - சங்கர்.. வேடுபரி...கோலாகலமாக நடந்த வீரப்பூர் மாசி பெருந்திருவிழா
வீரப்பூரில் பொன்னர் - சங்கர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடுபரி திருவிழா நடைபெற்றது.
திருச்சி: வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் கோவில்களின் மாசி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான பொன்னர் சங்கர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா திங்கட்கிழமை மாலையில் நடைபெற்றது. இன்று காலை 11 மணி அளவில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பு இருந்து பெரியகாண்டியம்மன் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீர வரலாற்று சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயில்களில் பொன்னர் - சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ண சாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில்களில் மாசிப் பெருந் திருவிழா நடைபெறும். புகழ்பெற்ற இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

இதேபோல் இந்த ஆண்டும் கடந்த 18 ம் தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்ணன்மார் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்த வளநாட்டில் பொன்னர் சங்கரின் தங்கையான தங்காள் விளையாட கிளி வேண்டும் என அண்ணன்களிடம் கேட்டதால் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் - சங்கர் கோவில் அருகே உள்ள கோவில் குளத்தில் உள்ள மரத்தின் மீதேறி தங்காளுக்கு கிளி பிடித்துக் கொடுத்தனர். அண்ணன்மார் என்றழைக்கப்படும் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். இந்த ஐதீக நிகழ்வை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

வீரப்பூர் மட்டுமின்றி அண்ணன்மார் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாண்டு பின் மீண்டதாக கூறப்படும் படுகளத்தில், படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி ஞாயிறு நள்ளிரவில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னர் சங்கர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா திங்கட்கிழமை மாலையில் நடைபெற்றது.

இன்று காலை 11 மணி அளவில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பு இருந்து பெரியகாண்டியம்மன் தேர்பவனி நடைபெற்றது. நாளை மார்ச் 1ஆம் புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், கவுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், நான்கு கரை பட்டையதார்களுமான பெரியபூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை மற்றும் பூசாரிகள், சோம்பாசிகள், பரிசாலங்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications