Karpooram: கற்பூரம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்.. கற்பூரத்தை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்.. அடடே
சென்னை: பல்வேறு ஆன்டிபயாடிக் பண்புகள் கொண்ட கற்பூரம், மருத்துவ ரீதியான பயன்களை தரக்கூடியது. அதேசமயம், ஆன்மீகத்திலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம்? வீட்டில் கற்பூரம் ஏற்றி வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன? கற்பூரத்தை நீரில் சேர்த்து குளிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா? வீடுகளில் கற்பூரத்தை எங்கெங்கே ஏற்றி வைக்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கற்பூரத்தை வெறுமனே வீட்டில் வைத்திருந்தாலே, அது காற்றில் பரவி நல்ல மணத்தை வீடு முழுவதும் பரப்பிவிடும்.. பாதத்தில் வெடிப்பு இருந்தால், கற்பூரத்தை காய்ச்சி தடவி வரலாம்.

ஆரோக்கிய நன்மைகள்
மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பச்சை கற்பூரம், பாசிட்டிவ் ஆற்றலை மேம்படுத்தக்கூடியது.. பாக்டீரியாக்களை அழிக்க செய்வதால் மிகச்சிறந்த நாசினியாக செயல்படுகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு புண், சேற்றுப்புண்கள் இருந்தால், கற்பூரம் மருந்தாக பலன் தருகிறது.
கற்பூரத்தை வீட்டில் எரிப்பதால், நம்மை சுற்றியுள்ள வளிமண்டலம் சுத்தமாகிறது.. கற்பூரத்தை நீரில் கலந்து குளித்தால், அரிப்பு, சொறி, முகப்பரு பிரச்சனைகள் அண்டாது.. சருமத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும். வாசனையாகவும் இருக்கும். உடலிலுள்ள சோம்பல்கள் விலகிவிடும்.
முக்கியத்துவம் - பாசிடிவ்
ஆன்மீகத்தில் கற்பூரங்கள் முக்கியத்துவம் பெற காரணம், கற்பூரம் எரிந்து அணைந்து, காற்றில் முற்றிலுமாக கரைந்துவிடுவதுபோல், கடவுளிடம் பக்தியில் கரைந்து சரணாகதி அடைய வேண்டும் என்பதையே உணர்த்துகிறதாம். கற்பூரத்தை எரிக்கும்போது, குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் பிணக்குகள் நீங்கி, ஒற்றுமையும், மகிழ்ச்சியும் தழைக்கும்.. தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல் வீட்டில் நெருங்காமல் இருக்க, ஒரேயொரு கற்பூரத்தை கொளுத்தி திருஷ்டி எடுக்கலாம்.
இரவு குடும்பத்தில் அனைவரும் தூங்கியதுமே கற்பூரம் ஏற்றலாம். இதனால் திருஷ்டி கழிந்து, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அத்துடன், சுற்றுப்புறத்திலுள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது இந்த இயற்கையான பூச்சிக்கொல்லி.
சமையலறை கற்பூரம்
அதேபோல, கற்பூரம் ஏற்றும் நேரமும் மிகவும் முக்கியம் என்பார்கள்.. அந்தவகையில் காலை நேரத்தில் எப்போதுமே கற்பூரம் ஏற்றக்கூடாது.. ஏனென்றால், நெய்விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு மட்டுமே காலையில் வீட்டில் எரிய வேண்டுமாம் .. அந்தவகையில், கற்பூரம் ஏற்றி வைக்க மாலை நேரம் மட்டுமே உகந்தது.. அதேபோல விளக்கேற்றும்போது, பூஜை நேரத்தில் கற்பூரம் ஏற்றலாம்.
வாசலில் தினமும் கற்பூரம் ஏற்றி வைக்கலாம். பூஜை அறையிலும், சமையலறையிலும் கற்பூரம் ஏற்றி வைக்கலாம். அதே போல, கற்பூரத்தை எங்கு வேண்டுமானாலும் ஏற்றி வைத்துவிட கூடாது.. முக்கியமாக எக்காரணம் கொண்டும் சிறிய பானைகளில் கற்பூரம் ஏற்றக்கூடாது.பித்தளையால் செய்யப்பட்ட கற்பூர ஆரத்தி தட்டு அல்லது தூபக்கால் வைத்து கற்பூரம் ஏற்றலாம்.. கற்பூரத்துக்கு எப்போதுமே பித்தளை விளக்கு நல்லது.
பீரோ, பணப்பெட்டி
பூஜை அறையில் கற்பூரத்தை வைக்கும்போது செழிப்பு உண்டாகும். நிம்மதி உண்டாகும். கற்பூரத்துடன், கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் பூஜையறையில் தென் மேற்கு மூலையில் வைத்துவிடுவதால், குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார பிரச்சனை சீராகும்.
பீரோ, பணப்பெட்டி போன்றவற்றிலும் இந்த வாசனை பொருட்களை முடிச்சு போல கட்டி வைக்கலாம்.கற்பூரத்துடன், முடக்கத்தான், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது இவைகளை சேர்த்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இதனை பசுவின் கோமியத்தில் கரைத்து வீட்டில் தெளித்து வந்தால் நிதி நிலைமை சீராகும். வாசலில் 1 கற்பூரம் வைத்து எரித்தாலும், ஒரு சிறிய மஞ்சள் துணியில் கற்பூரத்தை கல் உப்புடன் கலந்து வைத்து வாசலில் கட்டிவிடலாம்.












Click it and Unblock the Notifications