மதுரை மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் காலணியில் எழுதப்பட்டிருக்கும் பெயர்! யார் அந்த பீட்டர் பாண்டியன்?
மதுரை: சித்திரை திருவிழாவின் போது மதுரை மீனாட்சியம்மன் அணிந்திருக்கும் காலணியில் மாணிக்கம், வைரம், மரகதம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டு அதில் பீட்டர் என எழுதப்பட்டிருக்கும். யார் இந்த பீட்டர் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரது பெயர் எதற்காக அம்மன் காலணியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் காணலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அந்த மாவட்டத்து மக்களை மட்டுமல்லாமல் தன்னை நம்பி வருவோரை கைவிடாமல் பாதுகாத்து வருகிறாள். ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். அதில் முக்கிய திருவிழா சித்திரை திருவிழா ஆகும்.

அந்த சித்திரை திருவிழாவின் 5ஆம் நாள் உற்சவத்தின் போது அன்னை மீனாட்சி அம்மன் ஒரு தங்க காலணியை அணிந்து கொண்டு குதிரை மீது பவனி வருவார். அந்த காலணியில் தங்கம் மட்டுமில்லை, மாணிக்கம், வைரம், மரகதம் உள்ளிட்ட விலை மதிப்பில்லாத கற்களும் பதிக்கப்பட்டிருக்கும்.
இந்த விலை மதிப்பில்லாத காலணியை அம்மனுக்கு காணிக்கையாக கொடுத்த ஆங்கிலேயர் என்றால் நம்ப முடிகிறதா? இந்த காலணி எதற்காக கொடுக்கப்பட்டது, அந்த காலணியில் எழுதப்பட்டிருக்கும் பீட்டர் (PETER) யார் என்பதையும் பார்க்கலாம்.
மதுரை ஆட்சியர்
இந்த காலணியை அம்மனுக்கு காணிக்கையாக அளித்தவர் பெயர் ரவுஸ் பீட்டர். இவர் மதுரை ஆட்சியராக இருந்தவர். இவருக்கு மதுரை மீனாட்சி என்றால் கொள்ளை பிரியம். அவள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவர் 1812 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் மதுரைக்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
அப்போதெல்லாம் ஆட்சியராக இருப்பவர்தான் கோவில் தக்காராகவும் செயல்படுவார். முதலில் தக்கார் பணி என்றால் என்னவென தெரியாமல் விழித்தார். பின்னர் மதுரை மீனாட்சியின் மகிமையை கேட்டறிந்த அவர் தனது பக்தியையும் மரியாதையையும் செலுத்தினார்.
குதிரை
தினமும் குதிரையில் ஏறி தனது அலுவலகத்திற்கு செல்லும் போது மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டுதான் தனது பணிகளை தொடங்குவார். குதிரையில் வந்தாலும் தனது ஷூக்களை அகற்றிவிட்டு கிழக்கு கோபுரத்தின் வழியாக சுடும் வெயிலில் வெறுங்காலில் போய் அம்மனை வணங்குவார்.
மதுரை மக்கள் பாசம்
மீனாட்சி மீது அன்பு காட்டிய கலெக்டர் மீது மதுரை மக்களும் பாசத்தை காட்டினர். அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ஒரு நாள் இரவு மதுரையில் இடி, மின்னலுடன் பெருமழை கொட்டியது. அப்போது மழை கொட்டோ கொட்டுனு கொட்டியது.
வைகை ஆற்றில் வெள்ளம்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கனமழையால் பீட்டர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு சிறுமி வந்து பீட்டரை அழைப்பது போல் இருந்தது. உடனே வெளியே வந்து பார்த்த போது அந்த சிறுமி, பீட்டரின் கையை பிடித்துக் கொண்டு இழுத்து வந்து வெளியே விட்டார்.
வீட்டிற்கு வந்த சிறுமி
அப்போது திடீரென பீட்டர் தங்கியிருந்த வீட்டின் மீது இடி விழுந்து அந்த இடமே சுக்குநூறானது. இதனால் பீட்டர் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல திரும்பிய போது அந்த சிறுமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று மறைந்ததை அடுத்து பீட்டர் மெய்சிலிர்த்து போனார்.
காலணி
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மீனாட்சி, வெறுங்காலுடன் கொட்டும் மழையில் ஓடி வந்து தம்மை காப்பாற்றியதால் அவரது காலுக்கு அணிகலன் தர முடிவு செய்த பீட்டர், ஒரு ஜோடி தங்க காலணிகளை வழங்கினார். அதன் எடை 12 கிராம் ஆகும். அதில் முத்து, பவளம், வைரம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வைத்திருந்தார். அந்த காலணியில் பீட்டர் என ஆங்கிலத்தில் தனது பெயரையும் பொறித்து காணிக்கையாக வழங்கினார். அந்த காலணிகள் இன்றும் சித்திரை திருவிழாவின் 5ஆவது நாளில் மீனாட்சி அம்மன் தங்கக் குதிரையில் செல்லும் போது அவருக்கு இந்த காலணிகள் அணிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications