சீனாவுக்கு ஜால்ரா- மீனவர் பிரச்சனையை முன்வைத்து இந்தியாவுக்கு தலைவலி தரும் 'டக்ளஸ்' வகையறாக்கள்!
கொழும்பு: தமிழகம் மற்றும் ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையை டக்ளஸ் தேவானந்தா போன்ற சீனா ஆதரவு ஈழத் தமிழர் தலைவர்கள் சர்வதேச விவகாரமாக்க முயற்சிப்பது இந்தியாவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இலங்கையில் ராணுவத்துக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் நடத்திய போது சிங்களர் பக்கம் ஆதரவாக நின்றது சீனா. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பிந்தைய அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பின்பான காலத்தில் தென்னிலங்கையில் சீனாவின் கை விறுவிறுவென ஓங்கியது.
புலிகளுக்கு எதிரான யுத்த காலத்தில் சீனாவின் உதவியை சிங்களர் ஏற்றனர். ஆனால் சீனாவின் கை ஓங்கிய போது சிங்களர் அச்சமடைந்தனர். அதுவும் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் சுயாட்சி காலனி பிரதேசமாக உருமாறியதை சிங்களரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் சீனாவுக்கு எதிரான மனநிலை சிங்கள பேரினவாதிகளிடம் அதிவேகமாக பரவியது.
இதன் எதிரொலியாக சீனாவுடன் சில விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் கடும்போக்கு காட்டி மல்லுக்கட்ட வேண்டியதும் இருந்தது. உதாரணமாக சீனாவில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு வந்த கப்பலில், நச்சு பாக்டீரியாக்கள் இருப்பதாக கூறி அனுமதி மறுத்தது இலங்கை. இலங்கை கடற்பரப்பிலேயே 20,000 மெட்ரிக் டன் உரங்களுடன் 70 நாட்கள் காத்திருந்தது சீனா கப்பல். பின்னர் இலங்கையைவிட்டு அக்கப்பல் வெளியேறியது. இந்த விவகாரத்தில் இலங்கையிடம் நஷ்ட ஈடு கேட்டு நெருக்கடி கொடுத்தது சீனா.
இலங்கை- சீனா உறவில் புதிய பிரச்சனையாக, இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலிலும் சேர்த்தது சீனா. இப்படி மாறி மாறி இருதரப்பு உறவில் இருந்த விரிசல் மிக பிரமாண்டமான காற்றாலை திட்ட விவகாரத்தில் உச்சமட்டைந்தது. மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவை ஒட்டிய தீவுப் பகுதிகளில் 12 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலைத் திட்டங்களை அமைக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் தொலைவில் சீனாவின் பிரமாண்ட காற்றாலை திட்டம் அமைய இருந்தது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆகப் பெரும் அச்சுறுத்தலானது.

இதனால் மன்னார் வளைகுடாவில் சீனாவின் காற்றாலை திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனடிப்படையில் சீனா நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை இலங்கை திடீரென ரத்து செய்தது. இதில் கொந்தளித்து போன சீனா, மூன்றாவது சக்தியின் (இந்தியா) தலையீட்டால்தான் இலங்கை காற்றாலை திட்ட அனுமதியை ரத்து செய்தது என குற்றம்சாட்டியது. இத்தனை முரண்களுக்கு இடையேயும் சீனாவிடம் ராஜபக்சேக்கள் அரசாங்கம் அவ்வப்போது கடனுதவி பெற்றும் வருகிறது. அதேநேரத்தில் சிங்களரிடையேயான சீனா எதிர்ப்பு மன ஓட்டத்தை சமாளிக்க இந்தியாவிடமும் நட்பு பாராட்டி வருகிறது சிங்கள அரசு.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் இலங்கையுடன் நேசக்கரம் நீட்டித்தான் வருகிறது. அண்மையில் உ.பி.யில் சர்வதேச விமான நிலையம் திறப்பு நிகழ்ச்சிக்கு இலங்கையில் இருந்து அமைச்சகள், பவுத்த பிக்குகள் என பெரும் பட்டாளத்தையே அழைத்து வந்திருந்தது. இந்திய தரப்பில் இருந்தும் இலங்கை பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியான இந்தியா-இலங்கை-சீனா விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் தரப்பு நீண்டகாலமாகவே ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. அதேபோல் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது இருநாட்டு மீனவர் பிரச்சனையை சீனாவின் துணையுடன் சர்வதேச விவகாரக்கும் சதிகள் அரங்கேறத் தொடங்கி உள்ளன. கடந்த மாதம் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இந்தியாவுடனான மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார் டக்ளஸ் தேவானந்தா. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கான சீனாவின் தூதர் தலைமயிலான குழு, பட்டு வேட்டி வெறும் உடம்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தியது. பின்னர் யாழ்ப்பாணம் நூலகத்தையும் பார்வையிட்டது. ஈழத் தமிழ் மீனவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியது. மேலும் மன்னார் வளைகுடா பகுதி தீவுகளுக்கு வந்து ஆய்வு செய்தது. இந்தியாவின் கடற்பரப்பு எவ்வளவு தொலைவில் உள்ளது எனவும் விசாரித்துவிட்டுப் போனது சீனா குழு. சீன தூதரை ஈழத் தமிழர் பகுதிக்கு அழைத்து வந்ததது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான். அமெரிக்கா, சீனா என ஒவ்வொரு நாட்டு தூதரையும் இந்தியாவுடனான மீனவர் பிரச்சனையில் தலையிட வலியுறுத்திய அந்த டக்ளஸ் தேவானந்தா மீது இந்தியாவில் கொலை வழக்கும் உள்ளது.
ஒருகாலத்தில் இந்தியாவின் நேச சக்தியாக இருந்த அதே டக்ளஸ் தேவானந்தாதான் இப்போது சீனாவுக்கான இடைத்தரகராகி உள்ளார். டக்ளஸ் தேவானந்தா வரிசையில் மேலும் சில தமிழ் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இணைந்துள்ளனர். சீனாவின் குழுவினர் இலங்கையின் வடக்கு பகுதிக்கு வந்து சென்ற சில நாட்களிலேயே தமிழக மீனவர்களை அடுத்தடுத்து தாக்கி கைது செய்தது இலங்கை கடற்படை. 60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது இந்திய தமிழக மீனவர்கள் தங்களது நாட்டுக்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்ற வழக்கமான பல்லவியை பாடியது இலங்கை கடற்படை. இந்த விவகாரத்தின் பின்னணியில் சீனா இருக்கிறதோ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்திய மத்திய அரசும் இதுவரை இல்லாத வகையில் மீனவர்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளில் வேகம் காட்டி மீனவர்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்தது.
இப்போது ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டாக வேண்டும்; இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டியாக வேண்டும் என்ற நெருக்கடியை சீனாவும் அதன் ஆதரவு ஈழத் தமிழ் தலைவர்களும் உருவாக்கி வைத்துள்ளனர். 1987-ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை விவகாரங்களில் குறிப்பாக தமிழர், தமிழ் மீனவர் பிரச்சனையில் காத்திரமான தலையீட்டை காட்டியாக வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. இல்லை எனில் ஈழத் தமிழர்களை சீனா பக்கம் தமிழ்த் தலைவர்களே தள்ளிவிட்டு நிலவரத்தை இடியாப்ப சிக்கலாக்கிவிடக் கூடிய பேராபத்து இந்தியாவின் தலைக்கு மேலான கத்தியாக தொங்கி கொண்டிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications