பிரைம் டைம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் பாண்டியராஜன்.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை
சென்னை: நடிகராகவும், இயக்குனராகவும் பிரபலமான பாண்டியராஜன் முதல்முறையாக சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் முக்கியமான கேரக்டரில் அவருடைய காட்சிகள் வர இருக்கிறது. அவர் எந்த சீரியலில் அறிமுகம் ஆகிறார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்கள் சினிமாவில் பெரிய அளவில் பெயர் வாங்கி பிரபலமான பிறகு சின்னத்திரையில் அடி எடுத்து வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் பாண்டியராஜனும் இணைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணசித்திர நடிகராகவும் வெற்றி பெற்ற பலர் இருக்கிறார்கள். ஆனால் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர்தான். அந்த வெகு சிலரில் பாண்டியராஜனும் ஒருவர்.
சென்னை சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்த பாண்டியராஜன் அரசு பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரியில் வயலின் இசையில் இசை செல்வம் என்ற பட்டம் பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்து பட்டமும் பெற்றிருக்கிறார். இளைஞராக இருக்கும் போது கதாநாயகனாக வேண்டும் என்று ஆசையோடு அதற்காக முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அப்போது அவருடைய தோற்றத்தை குறை சொல்லி பலர் வாய்ப்பு வழங்க தயங்கி இருக்கிறார்கள். இதனால் எப்படியாவது இயக்குனராகி நடிகராகலாம் என்று முடிவெடுத்து திரை எழுத்தாளர் தூயவனிடம் உதவி எழுத்தாளராக சேர்ந்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பொல்லாதவன் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார்.

அதுபோல தூயவன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் பாண்டியராஜனுக்கு கே. பாக்யராஜின் அறிமுகம் கிடைத்தது. பிறகு கே பாக்யராஜின் உதவி இயக்குனராக மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சு போன்ற பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
அதற்குப் பிறகு இயக்குனராக மாறிய பாண்டியராஜன் கன்னி ராசி என்ற படத்தை பிரபு, ரேவதியை வைத்து இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது அதைத் தொடர்ந்து ஆண்பாவம் என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கதாநாயகனாக நடித்து விட்டார். அந்த திரைப்படம் பாண்டியராஜனுக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பாண்டியராஜன் நடித்துவிட்டார். ஆரம்பத்தில் இவர்களிடம் எது குறை என்று சொன்னார்களோ அதையே அவர் தனக்கு பிளஸ் ஆக மாற்றிவிட்டார். இவருடைய உயரத்தையும் திருதிருவென்ற முழியை பார்த்து உன்னால் கதாநாயகனாக முடியாது என்று சொன்னவர்கள் முன்பு அதே உயரம் மற்றும் திருதிரு முழியை வைத்து சாதித்து காட்டிவிட்டார்.
கடைசியாக தன்னுடைய மகனை வைத்து கைவந்த கலை என்று படத்தை இயக்கியிருந்தார். இதற்குப் பிறகு பாண்டியராஜன் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இத்தனை வருடங்களாக சினிமாவில் நடித்திருந்தாலும் அஞ்சாதே திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்ததும் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது.

இந்த நிலையில் இப்போது சின்ன திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் இவர் ஜட்ஜ் ஆக அறிமுகம் ஆகிறார். இவருடைய காட்சிகள் வரும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. செய்யாத தப்புக்காக கதாநாயகன் ஜெயிலில் இருக்கும் நிலையில் அவரை புரிந்து கொண்ட அவருடைய மனைவி வீரா கதாநாயகனை காப்பாற்றுவதற்காக முடிவெடுக்கிறார்.
அந்த நேரத்தில் நீதிபதியாக பாண்டியராஜன் வருகிறார். அவரிடம் என்னுடைய கணவருக்காக நானே வாதாடி கொள்கிறேன் என்று கதாநாயகி வீரா கூறுகிறார். இனி பாண்டியராஜன் தான் வீரா மற்றும் அவருடைய கணவர் சேர்த்து வைப்பதற்காக உதவுவார் என்று தெரிகிறது. இவருடைய என்ட்ரியால் இந்த சீரியலில் விறுவிறுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications