ஜல்லிக்கட்டு பார்க்க போன ஜீவாவுக்கு நடந்த சம்பவம்.. சுற்றிவளைத்த ஊர் மக்கள்.. பின்னணி சம்பவம்
சென்னை: பொங்கல் என்றாலே மதுரை, மதுரை என்றாலே ஜல்லிக்கட்டு. அந்த ஜல்லிக்கட்டு களத்தில் இந்த முறை காளைகளை விட அதிகமாக கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா என்றால் அது மிகையல்ல. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட ஜீவா திடீரென வந்ததுமே, அங்கிருந்த ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸ் பொங்கலாக மாறிவிட்டது.
காரில் வந்த ஜீவாவை கண்டதும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள, "என்னடா இது... காளைகளை பார்க்க வந்தா ரசிகர்கள் காளை போல ஓடிவர்றாங்களே" என்ற நிலை. செய்வதறியாமல் ஜீவா அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் திடீரென நுழைந்தார். அதுவும் வெறும் ஓய்வுக்காக இல்லை... காஸ்டியூம் மாற்றத்துக்காக.

ஏற்கனவே 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் முழுக்க வேஷ்டி - சட்டை லுக்கில் வரும் ஜீவா, பாலமேட்டிலேயே ஒரு கடையில் வேஷ்டி வாங்கி கட்டிக்கொண்டது கூட ரசிகர்களுக்கு கூடுதல் குஷி.
வீட்டுக்குள் ஜீவா, வெளியே ரசிகர்கள், நடுவில் பவுன்சர்கள்... அந்த வீடு அந்த சில நிமிடங்களில் ஒரு மினி செலிப்ரிட்டி ஸ்பாட்டாக மாறிவிட்டது. வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவர்கள்கூட "நாங்க உள்ள போய்ட்டு ஜீவாவோட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?"ன்னு கேட்ட அளவுக்கு அந்த சூழல் ஜாலியாக இருந்ததாம். பின்னர் எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, "5 நிமிடம் காத்திருந்ததுக்கு நன்றி"ன்னு ஜீவா சொல்லியதும், ரசிகர்களுக்கு அது பொங்கல் போனஸ் மாதிரி.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஜீவா வழக்கம்போல் தன்னுடைய மதுரை கனெக்ஷனை மறக்கவில்லை. "மதுரையில் இருந்து 10 கிலோமீட்டர் தள்ளி இருந்தாலே மதுரைக்காரன்தான். எங்க அம்மா கொடைக்கானல், பாட்டி பெரியகுளம். அதனால் நானும் மதுரைக்காரன் தான்"ன்னு சொல்லி, மதுரை ரசிகர்களின் மனதை அப்படியே அலையவிட்டார்.
ஏற்கனவே 'தெனாவெட்டு' படத்தில் நடித்த அனுபவம், அதில் வந்த "தப்புண்ணே" டயலாக் டிரெண்ட் ஆன கதையையும் ஜாலியாக நினைவுபடுத்தினார். ஆனால் எல்லாவற்றையும் விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த பிறகு ஜீவாவுக்கு வந்த புதிய ஐடியா. "ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்ற ஒரு ஐடியா வந்துள்ளது. ஜல்லிக்கட்டை பார்த்த பின்பு இயக்குநருக்கும் ஒரு ஐடியா கிடைத்துள்ளது" என்று சொல்லி, ரசிகர்களின் கற்பனையை ஏகத்துக்கும் ஓடவிட்டார்.
இனிமே ஜீவா - காளை - அரங்கம் - வேஷ்டி... இப்படியொரு படம் வந்தா எப்படி இருக்கும் என்ற பேச்சு அங்கேயே ஆரம்பமாகிவிட்டதாம். மொத்தத்தில், பாலமேடு ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு காளைகளின் வீரத்தை மட்டும் அல்ல, ஜீவாவின் ஜாலி பேச்சையும், ரசிகர்களின் அன்பையும் சேர்த்து ஒரு சினிமா சீனாகவே மாறியிருக்கிறது. ஜல்லிக்கட்டு களத்தில் கிடைத்த அந்த இன்ஸ்பிரேஷன், நாளை ஒரு படமாக மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.












Click it and Unblock the Notifications