எம்ஜிஆரின் தீவிர ரசிகர் "செவ்வாழை ராசு" திடீர் உயிரிழப்பு..காரணம் இதுதானா? பிரபலங்கள் வருத்தம்
சென்னை: பருத்திவீரன் திரைப்படத்தில் பிணம் தின்னி கேரக்டரில் நடித்த செவ்வாழை ராசு திடீரென்று இன்று உயிரிழந்திருக்கிறார்.
உடல் நல குறைவினால் அவர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவருடைய இழப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அவர் பற்றிய பல அரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரைப்படங்களாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சில நடிகர்களுக்கு தான் தனித்துவமான கேரக்டர் மற்றும் திறமை இருக்கும். அந்த மாதிரி தான் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்த நடிகர் செவ்வாழை ராசு இன்று உடல் நல குறைவினால் காலமாயினார் அவருக்கு வயது 70.
கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தில் பாரதிராஜாவால் அறிமுகமானவர்தான் செவ்வாழை ராசு. இவர் பல்வேறு படங்களிலும் பல கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருக்கு தனித்துவமான ஒரு அங்கீகாரம் இவருடைய குரல் வளம் தான். பருத்திவீரன் திரைப்படத்தில் இவருடைய கணீர் குரலால் பலரையும் கவர்ந்த இவருடைய சொந்த ஊர் தேனி தான்.
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம் தான் இவருடைய சொந்த ஊராம். அங்கு ஆடு மாடுகள் தான் ஆரம்பத்தில் மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் அடிக்கடி ஏழு கிலோமீட்டர் சென்று திரைப்படம் பார்ப்பாராம். அப்போது திரைப்படம் பார்க்கும்போது அதில் வரும் நபர்களைப் போலவே நாமும் ஒரு நாள் மாறுவோமா என்று ஆர்வத்தோடு மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு இருப்பாராம்.
14,15 வயதில் தான் இவருடைய கனவுகள் திரைப்படத்தில் நாமும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்ததாம். அப்போது இவருக்கு 19 வயதில் திருமணமும் முடிந்து விட்டதாம். திருமணத்திற்கு பிறகு அதிமுக கட்சியில் ஒரு பிரமுகராக மாறி இருக்கிறார். எம்ஜிஆர் தான் அவருக்கு ரொம்பவே பிடித்ததாம். எம்ஜிஆர் திரைப்படங்கள் என்றால் ரொம்பவே ரசித்து பார்த்தாராம்.
எம்ஜிஆர் திரைப்படங்களை பார்த்து பல நேரங்களில் அழுது இருக்கிறாராம். அப்போதுதான் கிழக்கு சீமையிலே திரைப்படத்திற்கு ஒரு விளம்பரம் வந்தததாம். அதில் கிராமத்து பஞ்சாயத்தை சார்ந்த பெரியமனிதர்கள் தேவை என்று கொடுத்திருந்தார்களாம். அப்போது செவ்வாழை ராசு நகரச் செயலாளராக இருந்தாராம். அப்போது கிழக்கு சீமையிலே திரைப்பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே செவ்வாலை ராசு பாரதிராஜாவை பார்ப்பதற்காக ஒரு பெரிய மாலையை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது பாரதிராஜா எதுக்காக வந்து இருக்கீங்க என்று கேட்டாராம். அதற்கு செவ்வாழை ராசு நீங்க கொடுத்த விளம்பரத்தை பார்த்து தான் அதற்காகத்தான் நானும் வந்தேன் என்று சொல்ல, நான் சொல்லும் டயலாக்கை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதை ஒரே டேக்கில் செவ்வாழை ராசு சொல்லி முடித்து விட்டாராம். உடனே பாரதிராஜா இவருக்கு முடியெல்லாம் வெட்டி டிரஸ் எல்லாம் மாத்துங்க என்று சொல்லி நடிக்க வைத்து விட்டாராம். அப்படித்தான் சினிமாவிற்குள் செவ்வாழை ராசு அறிமுகம் ஆகி இருக்கிறார்,
இந்த நிலையில் இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் இவர் கார்த்திக்கு அட்வைஸ் பண்ண சென்று அவரிடம் கொட்டு வாங்கிட்டு வரும் காட்சி பலருடைய மனதில் கவர்ந்தது. அதுபோல மைனா திரைப்படத்திலிருந்து இவருடைய நடிப்பு அதிகமானோரை கவர்ந்திருக்கும். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலைக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் எஸ் ஆர் தமிழன் ஏற்கனவே காலமாகிவிட்டார்.
இந்த நிலையில் செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான வருசநாடு அருகே உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. இதற்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications