பெரியாரால் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் IAS, IPS ஆக முடிந்தது.. நான் வரைந்த கடைசி ஓவியம் - சிவகுமார்
சென்னை: நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இப்போது சினிமாவை விட்டு விலகி மேடைப் பேச்சாளராகவும், ஓவியராகவும் பிரபலமடைந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூரை சார்ந்த சிவக்குமார் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படம் சார்ந்த ஓவியராக வாழ்க்கையை தொடங்கி அதற்கு பிறகு சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருந்த சிவகுமார் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகன்களுக்கு அப்பாவாகவும், அண்ணனாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் முழு ஈடுபாடோடு தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று முழு உழைப்பையும் போடும் சிவகுமார் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்திருந்தார். ஆனால் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய நடிப்பை சிலர் அலட்சியப்படுத்தியதால் தான் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டதாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
எத்தனையோ திரைப்படங்களில் தான் நடித்திருந்தாலும் சீரியலில் தனக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆனாலும் சில அலட்சியங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் நான் இனி இந்த சினிமா பொழப்பு வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று சிவக்குமார் பேசி இருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
இப்போதுள்ள இளைஞர்களுக்கு சிவக்குமாரை நடிகர் கார்த்தி மற்றும் சூரியாவின் அப்பாவாக தெரிந்திருந்தாலும் இவர் கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் தான் கடைசியாக 2007 ஆம் ஆண்டு வரைந்த பெரியார் ஓவியத்தை மாணவ மாணவிகளுக்கு திரையிட்டு காண்பித்து, பெரியார் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் வருவதற்கு காரணம் பெரியார் தான்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக மக்களை பிரிச்சு கீழ் ஜாதி என மக்களை அவமானப்படுத்தி முன்னேற விடாமல் வைத்திருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய போராளி பெரியார்". நான் 2007 ஆம் ஆண்டு கடைசியாக வரைந்த ஓவியம் இதுதான். இதற்குப் பிறகு பெரிதாக நான் எதுவும் வரையவில்லை.. என்று பெருமையாக சிவக்குமார் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications