கூட்டத்தில் மன்சூர் அலிகான் என் கழுத்தை பிடித்து தள்ளுனாரு! மறக்க முடியாத அனுபவம்.. எமோஷனலான சூரி
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் உருவான "கருடன்" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சூரி பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகாலம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். அதில்தான் முதன் முதலாக "மறுமலர்ச்சி" திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கும்போது அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சூரி பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றி அடைந்து விட்டு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் கூட்டத்தோடு கூட்டமாக நடித்து பிறகு கதாநாயகனாக வெற்றி அடைந்து இருக்கிறார்கள். அதில் விஜய் சேதுபதி, விமல், கார்த்தி என்று பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதில் ஒருவர் தான் நடிகர் சூரி. இவர் ஆரம்பத்தில் திருப்பூரில் ஒரு துணி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பிறகு தன்னுடைய நண்பர் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று சென்னைக்கு வந்து இருந்தபோது தான் நினைத்த மாதிரி வாய்ப்பு இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சூரி பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதில் சூரி பேசுகையில் நான் சென்னைக்கு வந்த புதியதில் என்ன செய்யப் போகிறோம் என்பதே எனக்கு தெரியாது. அந்த நேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நானும் ஒரு ஆளாக வந்து இருந்தேன். அப்போது ஒரு திரைப்படத்திற்கு மார்க்கெட்டில் வேலை செய்கிறவர்கள் அல்லது கூட்டமாக நிற்பவர்கள் போன்று நடிப்பதற்காக ஆட்கள் கூப்பிட வந்திருந்தார்கள்.
நானும் அவர்களிடம் நானும் நடிக்க வந்திருக்கிறேன் என்று சொன்னபோது வேற எந்த படத்திலாவது நடிச்சிருக்கீங்களா? என்று அங்கிருந்தவர்கள் கேட்க, நான் இல்லை என்று சொன்னதும் அந்த இடத்தில் என்னை மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அங்கிருந்த இன்சார்ச்சிடம் நானும் வரேன் சார் என்னையும் கூட்டிட்டு போங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு "சுமதி" என்ற ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட் அக்கா இருந்தாங்க. அவங்க என்ன தம்பி? உனக்கு எந்த ஊரு? என்று என்னிடம் கேட்டாங்க. நானும் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன் என்று விஷயத்தை சொன்னேன். அப்புறம் அவங்க இன்னொருத்தரிடம் என்னை கூட்டிட்டு போய் இவர் என்கூட வேற படத்துல நடிச்சிருக்காரு. இவரையும் மார்க்கெட் சீனுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல சரி என்று அந்த இன்ச்சார்ஜ் சொல்லிவிட்டார்.
உடனே ஒரு நான்கு டிரஸ் வேண்டும் என்று சொன்னாங்க. நான் ஓடிப்போய் எதிரே இருந்த ஒரு கடையில் நான்கு டிரஸ் வாங்கிக்கிட்டு அவங்களோடு போய்விட்டேன். அங்கு பார்த்தால் "மறுமலர்ச்சி" திரைப்படம் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அதில் மம்முட்டி சார், தேவயானி மேடம் நடிச்சிட்டு இருந்தாங்க. அந்த படம் தான் நான் முதல் முதலாக சைடு கேரக்டரில் நடித்த படம். அப்போது மம்முட்டியை பார்த்ததும் வாயைப் பிளந்து கொண்டு அதிசயப்பட்டு நின்றேன்.
பிறகு அந்த படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானை இதற்கு முன்பு திரைப்படங்களில் பார்த்து நான் திட்டி இருக்கிறேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக இருக்கும்போது இவரெல்லாம் ஒரு மனுசனான என்றெல்லாம் திட்டி இருக்கிறேன். அவரை முதன் முதலில் நேரில் பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது.
அதற்குப் பிறகு அங்கு ஒரு சண்டைக் காட்சி நடந்தது. அப்போது கூட்டத்தோடு நானும் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த இயக்குனர் என்னிடம் வந்து நீங்க இந்த பக்கத்தில் நில்லுங்க என்று சொல்ல நான் நின்று கொண்டிருந்தபோது மன்சூர் அலிகான் என் தோளில் கையைப் போட்டு நின்று கொண்டிருந்தார். எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல, ஒரு மாதிரி ஆகாயத்தில் பறந்த மாதிரி இருந்துச்சி. அவர் என்னப்பா சாப்டியா என்று விசாரித்தார்.
பிறகு காட்சிப்படி அவர் என்னுடைய கழுத்தில் கை வைத்து தள்ளிவிட்டு ஓடிப்போக வேண்டும். அதுதான் சூட் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது ரெடி என்று சொன்னதும் மன்சூர் அலிகான் என்னைக் கூட்டத்தில் தள்ளிவிட்டு ஓடிப்போய் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு இந்த மனுஷனை பார்த்து நாம எவ்வளவோ திட்டியிருக்கிறோம், பயந்திருக்கிறோம்.
ஆனால் இவர் இவ்வளவு கேஷ்வலா இருக்கிறாரே என்று அதிர்ச்சியா இருந்தது.. ஆனாலும் அந்த படம் வெளி வந்த பிறகு நான் நடித்த அந்த காட்சி எங்கே இருக்கிறது என்று பலமுறை தேடிப்பார்த்தேன் ஆனால் அது சீனில் வரவே இல்லை என்று தன்னுடைய முதல் பட அனுபவத்தை பற்றி சூரி மனம் திறந்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications