சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி விபத்து! கடலுக்குள் மூழ்கிய இருவர்.. அதிர்ச்சி சம்பவம்!
சென்னை: தமிழ் சினிமாவின் தனித்துவமான நகைச்சுவைக் கலைஞராக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் சூரி. துவக்கத்தில் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, 'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்தில் இடம்பெற்ற, புகழ்பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி தான். அந்தக் காட்சியின் மூலம் ரசிகர்களிடம் 'ரீச்' ஆன சூரிக்கு, அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' போன்ற படங்கள், முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தன.
விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரிக்கு, அவரது கலை வாழ்க்கையில் அடுத்த கட்டத்தைத் திறந்து வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் இயக்கிய 'விடுதலை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக (ஹீரோவாக) சூரி நடித்தார். ஒரு நகைச்சுவை நடிகராகப் பார்க்கப்பட்ட சூரி, விடுதலை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஒரு திறமையான குணச்சித்திர நடிகர் என்பதையும் நிரூபித்தார்.

அடுத்தடுத்து ஹிட் படங்கள்
'விடுதலை' கொடுத்த உத்வேகத்தில், சூரிக்கு அடுத்தடுத்து கதைநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது அவர் 'விடுதலை 2', 'கருடன்', 'மாமன்', 'கொட்டுக்காளி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில், 'கருடன்' மற்றும் 'மாமன்' ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்று 'சூப்பர் ஹிட்' அடித்தன. நகைச்சுவைக் கலைஞராகத் தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றி பெற்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகச் சூரி மாறியிருக்கும் பயணம், பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
மீனவர்களின் வாழ்வை பேசும் மண்டாடி
தற்போது சூரி நடித்து வரும் புதிய படம் 'மண்டாடி'. இது முழுக்க முழுக்க மீனவர்களின் வாழ்வியலைப் பேசும் கதையாக உருவாகிறது. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானபோது, அதில் சூரியின் மிரட்டலான தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு மீனவர் கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்த அழுத்தம் நிறைந்த உடல்மொழியும் தோற்றமும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்தது.
மண்டாடி படப்பிடிப்பில் விபத்து
'மண்டாடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. மீனவர்களின் போராட்டத்தை உண்மைக்கு மிக அருகில் கொண்டு வரப் படக்குழு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, திடீரெனப் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில், படக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கினர். அங்கிருந்த படக்குழுவினரின் முயற்சியால், அந்த இரண்டு பேரும் உடனடியாகக் காப்பாற்றப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டனர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டாலும், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள படப்பிடிப்புச் சாதனங்கள் நீரில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வெறும் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்து, இன்று ஒரு கதையின் நாயகனாக உயர்ந்து நிற்கும் சூரியின் வெற்றிப் பயணத்தில், அவரது அடுத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து, படக்குழுவினருக்கு ஒரு சோகமான அனுபவத்தை அளித்துள்ளது. என்றாலும், மனித உயிர் சேதம் எதுவும் ஏற்படாதது நிம்மதி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications