விருப்பமே இல்லாத கல்யாணம்! இப்போ அமெரிக்காவில் செட்டில்! நடிகை டூ டீச்சர்.. கண்ணாத்தாள் நீனா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, முன்னணி சின்னத்திரை நடிகை வரை உயர்ந்தவர் நடிகை நீனா. ஒரு காலத்தில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி ஆகியோர் வருவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் இவர்தான். திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கிய நீனா, சமீபத்திய பேட்டியில் தன்னுடைய திரைத்துறைப் பயணம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
ஒரு சில நடிகைகளை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை நீனா. இவர் 'கேளடி கண்மணி' திரைப்படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் பாடகர் எஸ்.பி.பி-க்கு மகளாக நடித்தது அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அதுமட்டுமில்லாமல் அஞ்சலி படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் தேசிய விருது முதலில் நீனாவிற்கு தான் கொடுக்க இருந்ததாம். ஆனால் பிறகு கடைசியில் ஷாமிலிக்குக் கிடைத்ததாம்.

முக்கிய படங்கள்
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நீனா 'விடுகதை' படத்தில் முழு நாயகியாகப் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது. அதுபோல இயக்குநர் பாரதி கண்ணன் இயக்கத்தில் உருவானத்தா கண்ணாத்தா படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருப்பார். அந்த படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
சின்னத்திரையின் நம்பர் ஒன் நடிகை
சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த நீனா, ஒரு கட்டத்தில் சினிமா போதும் என்ற மன நிலைக்கு வந்ததும் சின்னத்திரை அவருக்குப் பெரிய வாய்ப்புகளைத் தந்தது. குறிப்பாக ராதிகா சரத்குமார் நடித்த 'சித்தி' சீரியல் நீனாவின் புகழை மேலும் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து 'அண்ணாமலை' சீரியலிலும் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் நீனாதான் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்திருக்கிறார்.
கண்ணீருடன் திருமணம்
நீனா தொழில்ரீதியாக உச்சத்தில் இருந்தபோது அவரது தந்தை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தது அவரது சினிமா வாழ்க்கைக்குப் பெரிய தடையாகப் போனது. அப்போது நீனாவுக்கு சுமார் 21 வயது இருக்குமாம். கையில் ஏராளமான படங்கள் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள நீனாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவரது தந்தை மிகவும் கண்டிப்பாக திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறார்.
அதனால் திருமணம் செய்யும் போது நீனா அழுது கொண்டேதான் இருந்தார். அதை பார்த்ததும் அவருடைய கணவரும் உறவினர்களும் இவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்று நினைத்திருக்கிறார்கள். படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தை எல்லாம் அவரது தந்தை திரும்பக் கொடுத்துவிட்டாராம்.
திருமணமாகி சுமார் 22 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நீனா தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். நீனா தற்போது அங்கு ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். அவரது கணவரும் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்து வருகிறார்.
"என்னுடைய அப்பா எடுத்த முடிவு சரிதான், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும்,அப்பா வீட்டில் இருந்ததை விட இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் நீனா தெரிவித்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, நீனாவின் தற்போதைய சந்தோஷத்தைக் கண்ட அவரது கணவர் அவரை மீண்டும் நடிக்கப் போகச் சொல்லி வருவதாகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நீனாவுக்கு தற்போது குடும்பம், வேலை இதுவே போதும் என்றாகி விட்டதாம். எனவே மீண்டும் திரைத்துறை பயணத்தைத் தொடர அவர் ஆர்வம் காட்டவில்லை. கலை உலகில் உச்சத்தில் இருக்கும்போது வெளியேறுவது என்பது மிகப் பெரிய முடிவுதான். ஆனால் நீனாவை பொறுத்தவரை தன்னுடைய குடும்ப வாழ்க்கையே தனக்குப் பெரிய சந்தோஷம் என்று நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications