நான் தான் நடிகர் சரத்குமார் மகன் “ராகுல்”.. ராதிகா பற்றி திடீரென வீடியோ வெளியிட்ட மகன்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் அவருடைய மகன் ராகுல் திடீரென்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னால் தன்னுடைய அம்மாவிற்காக விருதுநகர் மக்களிடம் நேரடியாக ஓட்டு சேகரிக்க முடியவில்லை என்பதற்காக இணையதளம் மூலமாக புது முயற்சி எடுத்திருக்கிறார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஃபீவர் அதிகமாக இருக்கிறது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கூட கண்டு கொள்ளாமல் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளை மறுநாள் நடக்க இருக்கும் தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகையாகவும் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் அதிமுக ஆதரவு பெற்ற தேமுதிகவின் சார்பாக நடிகர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அதுபோல அங்கு ஏற்கனவே வெற்றி பெற்ற மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.
இதனால் விருதுநகர் தொகுதி ஸ்டார் தொகுதியாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் அனல் பறக்கும் வெயிலிலும் தங்களுடைய வெற்றியை உறுதி செய்வதற்காக விருதுநகர் தொகுதியில் போட்டியாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அவருடைய மகன் ராகுல் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், "வணக்கம் என்னுடைய பெயர் ராகுல் சரத்குமார். எங்க அம்மா ராதிகா சரத்குமார் இந்த முறை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்தல் போட்டியில் நிற்கிறார். எங்க அம்மா ஒரு மிகப்பெரிய திறமைசாலி, அவர் சூப்பர் பெண்மணி. அவங்க மக்கள் ஆசை என்னென்ன இருக்கிறதோ அதை நேர்மையா செய்யணும்னு நினைப்பாங்க. இதை நான் விருதுநகர் தொகுதிக்கு வந்து சொல்லணும்னு ஆசைப்பட்டேன்.
ஆனால் எனக்கு கல்லூரி பரீட்சை இருப்பதால் என்னால் வர முடியல. எங்க அம்மா மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீங்களும் எங்க அம்மா மேலயும் தாமரை சின்னத்தின் மேலும் நம்பிக்கை வைத்து ஓட்டு போட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஓட்டு கேட்டு இருக்கிறார். முதல் முறையாக தன்னுடைய அம்மாவிற்காக ராகுல் வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் இது அதிகமான லைக்களை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா உட்பட பல பிரபலங்களும் இந்த வீடியோவிற்கு லைக் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே விஜய பிரபாகரனுக்காக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவுக்காக அவருடைய மகன் எடுத்திருக்கும் முயற்சியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் யார் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications