பாக்கியலட்சுமி சீரியலில் இனி கதை இதுதானா? அப்போவே பாண்டியன் ஸ்டோரில் அப்படி.. இனி பாக்யா பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறந்து போவது போன்று காட்சிகள் இருக்கிறது. இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் நிலையில் இனி சீரியலில் கதை எப்படி போகும் என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் அடிக்கடி சங்கமம் வந்து இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் இதுபோலத்தான் சில வருடங்களுக்கு முன்பு பாண்டியனின் அம்மா இறந்து போவது போன்ற திடீர் டுவிஸ்ட் வைத்திருந்தார்கள்.

சீரியலில் டிஆர்பிஐ கூட்டுவதற்காக ஏதாவது ஒரு முக்கிய திருப்பத்தை சீரியல் தரப்பினர்கள் கையில் எடுக்கின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியனின் அம்மாவின் இறப்பு பெரும் அதிர்ச்சியையும் உணர்வு பூர்வமான தருணத்தையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று இரண்டு வாரங்கள் இழுத்தடித்ததுதான் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அதே கொடுமை இப்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் இருக்கிறது. கடந்த வாரத்தில் பாக்கியா தன்னுடைய மாமனார் ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அப்போது அவர் பல இடங்களில் தான் செத்தாலும் கோபி வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு இன்றைய எபிசோடிலும் ராம மூர்த்தி உருக்கமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

நாளை எபிசோடில் அவர் இறந்து போவது போன்ற காட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராமமூர்த்தி பாக்யாவிடம் கடைசியாக நீ எல்லாருடைய சந்தோஷத்தைபார்த்துவிட்டு உன்னுடைய வாழ்க்கையை நீ வாழாமல் போய் விடாதே. நீ உனக்காகவும் வாழனும் என்று இறுதியாக ஆசீர்வாதம் செய்து சொல்லி இருக்கிறார்.
இதனால் ராமமூர்த்தி இறந்த பிறகு பாக்யா மற்றும் பழனிச்சாமியின் திருமணம் பெரும் பஞ்சாயத்துக்கு இடையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோபி பாக்கியா மீது கொலைவெறியில் இருக்கிறார். இப்போது தன்னுடைய அப்பா இறந்து போவதற்கு காரணம் பாக்கியா தான் என்று பழியை தூக்கி போடுவார்.

வழக்கமாக இது நடப்பதாக இருந்தாலும் இந்த முறை இப்போதைக்கு பாக்கியா பக்கம் இருக்கும் ஈஸ்வரி கூட எழில் வீட்டை விட்டு பாக்கியாவால் சென்றதால் தான் ராமமூர்த்திக்கு இப்படி ஆகிவிட்டது என்று கோபப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரைக்கும் ஈஸ்வரி ஏதாவது தப்பு செய்தால் ராமமூர்த்தி தான் தட்டிக்கொண்டு இருப்பார்.
ஆனால் இனி ராமமூர்த்தியும் இல்லை என்பதால் ஈஸ்வரி தன்னுடைய பழைய ஆட்டத்தை தொடங்குவாரா? அல்லது இனி அடங்கி ஒடுங்கி இருக்கப் போகிறாரா? என்றும் கேள்விகள் இருக்கிறது. எப்படியும் நாளைக்கான எபிசோடில் ராமமூர்த்தி இறப்பதை காட்டிவிட்டு அடுத்த வாரத்தில் அவருடைய இறுதி சடங்குகள் நடப்பது போன்று காட்சிகள் வரும். ஏற்கனவே பாக்கியாவும், கோபியும் ஒரு குளக்கரையில் நிற்பது போன்று ஒரு காட்சி வெளியாகி இருந்தது.

இதனால் இனி இராமமூர்த்தியின் இறுதி சடங்குக்கு கோபி வந்து பிரச்சனை செய்ய... ஈஸ்வரி வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடுக்க, என்ற பஞ்சாயத்துக்கு இடையில் இரண்டு மூன்று வாரங்கள் ரசிகர்கள் கண்ணீர் வடிக்க தயாராக இருக்க வேண்டியது தான்.












Click it and Unblock the Notifications