“உடம்பு பலவீனம்… ஆனால் மனதில் இன்னும் அதே தைரியம்!” ராதிகாவிடம் பாரதிராஜா சொன்ன வார்த்தை! நெகிழ்ச்சி தருணம்
சென்னை: தமிழ் சினிமா பற்றி பேசும்போது "இயக்குநர் இமயம்" என்று முதலில் நினைவுக்கு வருவது பாரதிராஜா தான். கிராமத்துக் கதைகளை திரைக்கு கொண்டு வந்து, சாதாரண மக்களின் வாழ்க்கையையே சினிமாவாக மாற்றியவர். 1977-ல் வெளியான 16 வயதினிலே படத்திலிருந்து தொடங்கிய அவரது பயணம், இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வரலாறு.
இந்த நிலையில் சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவை நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருக்கிறார். தன்னுடைய குரு தன்னை பற்றி பேசிய வார்த்தைகளை கேட்டு ராதிகா சந்தோஷத்தில் துள்ளி குதித்து இருக்கிறார்.

தனித்துவமான இயக்குனர்
ஒரு இயக்குநராக மட்டும் இல்லாமல், பல புதிய முகங்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கலைஞர் என்பதும் பாரதிராஜாவின் பெரிய சாதனை. ராதிகா சரத்குமார், ராதா, ரேவதி போன்ற பலரை ரசிகர்களிடம் கொண்டு சென்றவர் இவரே. அதனால் தான் "ஹீரோக்களை உருவாக்கிய இயக்குநர்" என்ற பெயரும் அவருக்கு வந்தது.
ஆனா, இந்த அளவுக்கு உயர்ந்தவர் வாழ்க்கையிலும் சோதனைகள் குறையவில்லை. சில வருடங்களுக்கு முன் தனது மகன் மனோஜை இழந்தது அவரை மிகவும் பாதித்தது. அதற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தார். சமீப காலமாக மலேசியாவில் மகள் வீட்டில் இருந்த அவர், பின்னர் சென்னை திரும்பினார்.
சினிமா பிரபலங்கள் சந்திப்பு
அதற்குள் உடல்நல பிரச்சனை வந்து சேர்ந்தது. கடந்த டிசம்பரில் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக கூறப்பட்டதும், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி. உடனே திரையுலக நண்பர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
சிகிச்சைக்கு பிறகு தற்போது வீடு திரும்பியுள்ள பாரதிராஜா, முன்பை விட மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டாலும், மன உற்சாகம் மட்டும் குறையவில்லை. இதை தான் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ காட்டுகிறது.

பாரதிராஜாவின் பாராட்டு
அந்த வீடியோவில், ராதிகா அவரை சந்தித்து "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்கும் போது, பாரதிராஜா சிரித்தபடி பேசுகிறார். அப்போது நீங்க நான் நடிச்ச தாய்க்கிழவி படம் பார்த்தீங்களாமே என்று கேட்டேன். சூப்பரா இருந்துச்சு "உனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்... படம் ரொம்ப நல்லா இருக்கு" என்று அவர் சொல்வது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அதற்கு ராதிகா, "அது நடந்தா உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்" என்று சொன்ன தருணம், அந்த இருவருக்கும் உள்ள மரியாதையும் பாசமும் எவ்வளவு ஆழம் என்பதை காட்டியது.
இந்த வீடியோ வெளியானதும், ரசிகர்கள் எல்லாம் ஒரே குரலில் "பாரதிராஜா சார் சீக்கிரம் பழைய மாதிரி குணமடையணும்... மீண்டும் சினிமாவுக்கு வரணும்" என்று வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பலரை அறிமுகப்படுத்தி நட்சத்திரங்களாக மாற்றியவர்... இன்று அவரே வாழ்க்கையின் சோதனைகளை அமைதியாக எதிர்கொண்டு நிற்கிறார். உடம்பு சோர்ந்தாலும், அந்த கலைஞரின் மனசு இன்னும் அதே உற்சாகத்தோடே இருக்கிறது என்பதுதான் இந்த சம்பவம் சொல்லிக்கொடுக்கிறது.
அதனால்தான், "பாரதிராஜா மாதிரி ஒருவர் மீண்டும் திரைக்கு வரணும்" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இன்னும் குறையாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications