ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்திய கானா பாடகி இசைவாணி.. அந்த வரி..! குவியும் கண்டனங்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கானா பாடகி இசைவாணி "ஐ ஆம் சாரி ஐயப்பா" என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு சுயதின பாடல்களை பாடி பிரபலமடைந்து இருக்கிறார். இவருடைய கானா பாடல்கள் பெண்கள் அடிமை, பெரியார் தத்துவம், சுய கௌரவம் என்று பல வகைகளில் இருக்கிறது.

சென்னையிலே பிறந்து வளர்ந்த இசைவாணி பல வருடங்களாக கானா பாடல் பாடி வருகிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இவர் பெரிய அளவில் பிரபலமானார். ஐந்தாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயது குறைந்த போட்டியாளராக இவர் அறிமுகமானார். அப்போது அவருக்கு 22 வயது என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதற்கு முன்பு தன்னுடன் கானா பாடி கொண்டிருந்த சதீஸ் என்பவரை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எந்த இடத்திலும் இசைவாணி வாய் திறக்கவில்லை. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தன்னுடைய முன்னாள் கனவர் தனக்கு பிரச்சனை கொடுப்பதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளிநாடுகளிலும் பல ஈவண்டுகளில் பாடல்கள் பாடி வருகிறார். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் இசைவாணி பாடல் பாடி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பொதுவாக ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும்தான் செல்ல வேண்டும்.
ஆண்கள் எல்லா வயதினரும் கலந்து கொண்டாலும் பெண்கள் இந்த சன்னதிக்கு செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் பெண்கள் இளம் வயதில் வந்தால் என்ன தப்பு என்று கேட்கும் வகையில் பாடல் வரிகள் இருக்கிறது. அதாவது "ஐ ஆம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா.. நான் தாடிக்காரன் பேபி... இப்ப காலம் மாறிப்போச்சு... இனி தள்ளி வச்சா தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.." என்று பாடலை பாடி இருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பா ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மார்கழியில் மக்கள் இசை என்கிற இசை நிகழ்ச்சியில் தான் இசைவாணி இப்படி ஒரு பாடலை பாடி இருக்கிறார். இது குறித்து பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். கார்த்திகை மாதம் பிறந்தாலே சபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டு இரண்டு மாதம் கடுமையாக விரதம் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். இதில் சில சம்பிரதாயங்கள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் அதை உடைக்கும் வகையில் இசைவாணி பாடி இருக்கிறார் என்று பலரும் அவரைத் திட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications