Bigg Boss: வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? நடந்தது இதுதாங்க! திவாகர் கொடுத்த விளக்கம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, 'வாட்டர்மிலன் ஸ்டார்' எனப் பிரபலமான திவாகர் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய திருமணத் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், மதுரையில் நடந்த 'திவ்யா' திரைப்படத்தின் ஃப்ரீ ஷோ காட்சிக்குப் பிறகு, திவாகர்செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல விஷயங்களைப் பகிரங்கமாக பேசியுள்ளார்.

விழிப்புணர்வு அவசியம்
புதிய முகங்கள் நடித்து, ராஜபாண்டி இயக்கி நடித்துள்ள 'திவ்யா' படத்தை பார்த்த திவாகர், "இந்த படத்தை பார்க்கும்போது சசிகுமார் அண்ணன் எடுத்த 'நந்தன்' படம் போன்ற உணர்வு எனக்கு இருந்தது" என்று பாராட்டியுள்ளார். சசிகுமார் அண்ணன் போலவே பல சமூகச் சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் ஸ்கிரிப்ட் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, திவாகர் அதற்குத் தெளிவாக பதில் அளித்தார்: "பிக் பாஸை ஸ்கிரிப்ட் படி நடக்கும் நிகழ்ச்சி என எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் பிக் பாஸில் எந்த வித கதை விவரமும் கிடையாது. அனைவரும் என்னை இளைத்து விட்டீர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் பிக் பாஸில் உள்ளே சென்றவுடன் எங்களை அடைத்து விடுவார்கள். அங்கு நடந்த அனைத்துமே உண்மை" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
வீட்டு வேலைகள்
"நான் பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலை கத்து கொண்டேன். சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாத என்னை பாத்திரம் கழுவுவதில் இருந்து கழிப்பறை கழுவுவது வரை அனைத்தும் கத்துக் கொண்டோம்" என்று அவர் நிகழ்ச்சியில் செய்த அலப்பறைகளையும், கற்றுக்கொண்ட விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு பள்ளியில் படித்தால் கூட ஓய்வாக இருக்கலாம், ஆனால் பிக் பாஸில் உணவுக்கு தட்டுப்பாடு இருக்கும், அவர்கள் சொல்லும் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
குழந்தைகள் அழுகை
திவாகர் வெளியேறியபோது நிறையக் குழந்தைகள் அழத் தொடங்கியதாகப் பகிர்ந்துகொண்டார். "நடிப்பு அரக்கன்" என்ற அவருடைய வசனம் சின்னக் குழந்தை முதல் பெரியவர் வரை மிகவும் பிரபலமாகிவிட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்று சொல்ல முடியாது என்றும், புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தால் விளையாட்டு மாறலாம் என்றும் திவாகர் கூறியுள்ளார்.
திருமண சர்ச்சை மற்றும் எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பரவிய திருமண சர்ச்சைக்கும் திவாகர் தெளிவாகப் பதில் அளித்துள்ளார். "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறையத் தவறான தகவல்கள் சில யூடியூபர்களால் பரப்பப்படுகிறது. நான் தனிமையில் தான் இருக்கிறேன். 3 பெண்களையெல்லாம் திருமணம் செய்யவில்லை" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பிக் பாஸிற்கு போன பின்பு தனக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதால், தன்னுடைய நல்ல பெயரை கெடுத்து போடும் விதமாக சிலர் இப்படி செய்து வருவதாகத் திவாகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் பிறகு பொய்யான தகவல் வந்தால், அதைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். திவாகர் இப்போது தான் நடித்த 'திவ்யா' படத்தின் வெற்றிக்காக காத்திருப்பதாக பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications