பிக் பாஸ் கேவலத்தின் உச்சக்கட்டம்- நடிகை ஆதங்கம்! போட்டியாளர்கள் செய்வது சகிக்கல- கோபமான விஜய் சேதுபதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புகளையும், சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்து வரும் நிலையில், தற்போது இந்த சீசனின் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளன. நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதியே போட்டியாளர்களை விமர்சித்ததோடு, சீரியல் நடிகை லட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாக சாடிப் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் கோபமான ப்ரோமோ
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராகப் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார் என்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டாலும், நிகழ்ச்சியின் மந்தமான போக்கு அவருக்குமே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
"வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்... இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும்... ஆனா இங்க சில பேர் நடந்து கொள்ளுறது சகிக்க முடியவில்லை. இதெல்லாம் அவங்க தெரியாமல் எல்லாம் பண்ணல... தெரிஞ்சே தான் செய்யுறாங்க. ஆனா, சகிக்கிற அளவுக்கு இல்ல என்றதை அவங்களுக்கு சொல்லணும் வாங்க பேசுவோம்" என்று அவர் கூறியுள்ளார்.
அணுகுமுறை
இந்தக் கருத்து மூலம், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை அதிக உற்சாகத்துடனும், நேர்த்தியான முறையிலும் நடத்த உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனினும், அவரது இந்தக் 'கெத்து'டனான அணுகுமுறை சில நேரங்களில் 'ஓவர் டோஸ்' ஆகி, அவருக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இயக்குநர் பிரவீன் காந்தி கூட வெளியே வந்த பிறகு அளித்த பேட்டிகளில், விஜய் சேதுபதியை அட்டாக் செய்தே பேசியிருக்கிறார்.
லட்சுமியின் உச்சக்கட்ட காட்டம்
பிக் பாஸ் போட்டியாளர்களின் எல்லை மீறிய நடத்தைகள் குறித்துப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், சீரியல் நடிகை லட்சுமி மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. லட்சுமி அளித்த பேட்டியில், "பிக் பாஸ் நிகழ்ச்சி கேவலத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பவர்களும் தொகுத்து வழங்குகிறவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் வெளியிடுகிறீர்களா? உங்கள் வீட்டுக் குழந்தைகள் பார்க்கிறார்களா இல்லையா. கொஞ்சமேனும் சமூக அக்கறை இருக்கிறதா? இந்த கன்றாவியை ஒளிபரப்பி என்ன சாதிக்கப்போகிறீர்கள்."
"உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள். அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அசிங்கமா பேசுபவர்களை விஜய் சேதுபதி கன்ட்ரோல் செய்ய வேண்டும்" என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார். "மாதர் சங்கத்தினர் ஏதோ ஒரு பாடலில் தவறான வரி இருந்தால் கொடி பிடித்துக்கொண்டு வருவார்கள். இவ்வளவு அசிங்கம் நடக்குது. இப்போ எங்கே சென்றார்கள்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
வெளியேறிய போட்டியாளர்கள்
இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, விஜே பார்வதி, கம்ருதீன், ஆதிரை, விக்கல்ஸ் விக்ரம் எனச் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். முதல் ஆளாக நந்தினி சுய விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார். அதனையடுத்து பிரவீன் காந்தி, அப்சரா உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரவீனும், அப்சராவும் பெரிதாக ஈர்க்காததால்தான் உடனடியாக எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
ஒழுங்கீனம்
பிக் பாஸே போட்டியாளர்களிடம் "இந்த சீசன் ஒழுங்கீனத்தால் ஃபேமஸ் ஆகியிருக்கிறது" என்று வருத்தப்படும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. விஜே பாருவை முதலில் தங்கை என்று அழைத்த வாட்டர் மெலன் ஸ்டார் போகப் போகத் தன்னுடைய செயலில் மாற்றத்தைக் காண்பித்தது, எஃப்ஜே, அரோரா, ஆதிரை உள்ளிட்டோரின் முகம் சுளிக்கும்படியான நடத்தைகள் ஆகியவை எதிர்ப்புகளை வலுத்திருக்கின்றன.
விஜய் சேதுபதியின் எச்சரிக்கை, மற்றும் லட்சுமியின் காட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்களா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications