ரஜினியை "அந்த” வசனம் பேச வைத்ததற்காக கோபப்பட்டாங்க! ஆனால் நடந்த விஷயம் இதுதான்! பா ரஞ்சித் ஆதங்கம்
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணியில் தீபாவளிக்கு ரிலீஸான 'பைசன் காளமாடன்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது . அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை, பா.ரஞ்சித்தின் 'நீலம் ஸ்டுடியோஸ்' தான், 'அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்'டோட சேர்ந்து தயாரிச்சிருக்காங்க.
சமீபத்தில் இந்தப்படத்தோட நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் கலந்துகிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் ரொம்பவே எமோஷனலாகவும், உண்மையாகவும் சில விஷயங்களைப் பேசினாரு. அந்த வீடியோஸ் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபாலி கொடுத்த விமர்சன சுமை
ரஞ்சித் பேச ஆரம்பிச்சதே, அவர் எடுத்தப் படங்களால தனக்கு ஏற்பட்ட விமர்சனங்களைப் பத்திதான். "நான் 'மெட்ராஸ்'னு ஒரு படம் பண்ணலைன்னா, ரஜினிகாந்த் எனக்கு 'கபாலி' பட வாய்ப்பைக் கொடுத்திருப்பாரா? ஆனா, 'கபாலி' படம் வெளியானதும் விமர்சனங்கள் கொடிகட்டிப் பறந்துச்சு. 'ரஜினி உனக்கு வாய்ப்பு கொடுத்தார் பாத்தியா? ரஜினியை வச்சு எப்படி நீ SC டயலாக்கைப் பேச வைக்கலாம்? என்று மோசமான விமர்சனங்கள்தான் வந்துச்சு. எனக்கு ரொம்பக் குழப்பமாக இருக்கும்."
வசூல் வேட்டை vs விமர்சனம்
"'கபாலி' படத்தோட வெற்றி தயாரிப்பாளர் தாணுவுக்குத் தெரியும். ரிலீஸாவதற்கு முன்பே 100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் 'கபாலி' தான். ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால், அதை வெற்றி என்கிறார்கள். ஆனா, 'கபாலி'யை இவர்கள் மோசமாக விமர்சித்தார்கள்."
'ரஜினியை எப்படி சாதிக்குள் கொண்டு வரலாம்? அவரிடம் எப்படி பட்டியல் சமூக வசனத்தைக் கொடுக்கலாம்?' என்றெல்லாம் விமர்சித்தார்கள். அதை எப்படி கையாளுவதுன்னு எனக்குத் தெரியவில்லை. எனக்கு என்ன பிரச்சனைன்னா, 'கபாலி' படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதைத் தாண்டி... இதற்குப் பிறகு இது போன்றப் படங்கள் எடுக்கவே முடியாதா? அப்படியும் யாராவது எடுத்தால் இப்படி ஒரு சிக்கல் வருமா? என யோசிக்க வைத்தது."
"சினிமாவில் இதை எப்படிப் பேசலாம்ன்னு சொன்னார்கள். அப்போ, இதற்கு முன்னாடி என்னை மோசமாகச் சித்தரித்த சினிமாக்களை இவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை," என்று தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.
காலா: நில உரிமை பேச வந்த கதை!
விமர்சனங்கள் வந்தபோதும், ரஜினிகாந்த் மீண்டும் ரஞ்சித்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தாராம், அதுதான் காலா.'காலா' படத்தில் ரஜினி தாராவி பகுதியில் நில உரிமைக்காகப் போராடும் ஒரு முதிர்ந்த தலைவராக நடித்திருப்பார். இந்தப் படத்தின் 'செம்ம வெயிட்டு' மற்றும் 'கற்றவை பற்றவை', மாய நதி இன்று போன்றப் பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன. ரஞ்சித் நில உரிமைப் பிரச்சனையை இதில் ஆழமாகப் பேசியிருப்பார்.
"ஒரு பெரிய ஸ்டார் எனக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். அவரை வச்சு ஒரு கமர்சியல் சினிமா எடுத்து நான் பணம் சம்பாதித்து என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் அளவிற்குப் போயிருக்கலாம். ஆனா அதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் நில உரிமை பிரச்சனையைப் பேசினேன்." "ஆனால், அந்தப் படத்திலும் 'ராவணனை எப்படி நீ ஹீரோவாகக் காட்டலாம்?' என்ற விவாதம் வந்தது. ஒவ்வொரு படமும் வெளியான போது வெற்றி தோல்வியை விட, இந்தச் சமூகம் இந்தப் படத்தை எப்படிப் புரிந்துகொள்கிறதுன்னு தான் யோசிக்க வைத்தது."
ரஞ்சித்தின் லட்சியம்
"என்னை ஒரு சாதி வெறியன் என்னும் அடையாளத்தைக் குத்தினார்கள். என் படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சாதியை ஆதரித்து வசனம் இடம் பெற்றிருக்கிறதா? என்னுடைய படங்களில் பெண் உரிமை உட்பட நிறைய ஸ்டீரியோடைப் விஷயங்களை உடைத்திருக்கிறோம். சமத்துவத்தைப் பேணுகிற ஒரு சமூகத்தை உருவாக்க எனக்கு ஒரு பெரும் கனவு இருக்கிறது. அந்தக் கனவின் அடிப்படையில் தான் திரைப்படத்தை உருவாக்குகிறேன்," என்று கூறி தன் பேச்சை முடித்தார் ரஞ்சித்.
ரஞ்சித்தின் இந்தப் பேச்சு, அவர் சினிமாவில் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், சமூகத்தின் மாற்றம் காணத் துடிக்கும் ஒரு போராளியாக இருக்கிறார் என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications