வயற்காட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் அசாத்திய டான்ஸ் திறமை.. காலில் விழுந்த பாபா மாஸ்டர்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பஞ்சமி என்ற பெண்ணின் அசாத்திய திறமையை பார்த்து பாபா மாஸ்டர் காலில் விழுந்து இருக்கிறார். அதற்கு அந்த பெண் தன்னுடைய சொந்த ஊர் மற்றும் தன்னுடைய கஷ்டங்கள் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
எளியவர்களின் திறமைகளையும் உலகறிய செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த சேனலில் ஏற்கனவே சரிகமப நிகழ்ச்சியிலும் பல அடித்தட்டு மக்கள் தங்களுடைய திறமையை காட்டி பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள்.

திறமைக்கு வாய்ப்பு
அதுபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் தங்கள் திறமையை காட்டுவதற்கு மேடை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வர பிரசாதமாக அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் என்ற பெயரில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாக இருக்கிறது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நடுவர்கள்
தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடைபெற்று வந்து நிலையில் ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்களோடு வரலட்சுமி சரத்குமாரும் நடுவராக கலந்து கொள்கிறார்.

எளியவர்களுக்கான மேடை
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பஞ்சமி என்ற பெண் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பஞ்சமியின் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி தான். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று குழந்தைகளையும் வளர்த்தப்படியே காட்டு வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்.
கணவர் சப்போர்ட்
ஆனால் பாட்டு சத்தம் எங்கே கேட்டாலும் தன்னை அறியாமலே தனது டான்ஸ் வந்துவிடுகிறது. என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற துடிப்போடு இருந்த பஞ்சமிக்கு அவருடைய கணவர் தான் முழு சப்போர்ட் கொடுத்திருக்கிறார். உன்னால் ஜெயிக்க முடியும். நீ கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆடிஷனில் கலந்து கொள்ள பஞ்சமியை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

மூன்று குழந்தைகளின் அம்மா
அங்கு பஞ்சமியின் டான்ஸை பார்த்து எல்லோரும் மெய் சிலிர்த்து போயிருக்கிறார்கள். புடவையை தூக்கி சொருகி எதார்த்தமாக மேடையில் வந்து நின்ற பஞ்சமி தன்னை மூன்று குழந்தைகளின் அம்மா என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரை பார்க்கும் போது அவருடைய கண்களில் டான்ஸ் மீது தனக்கு இருக்கும் வெறி எவ்வளவு என்று அப்பட்டமாக தெரிகிறது.

பாபா மாஸ்டரின் பெருந்தன்மை
பிறகு அவருடைய டான்ஸை பார்த்ததும் அங்கிருந்த நடுவர்கள் அனைவருமே வாவ் சொல்லிவிட்டனர். பிறகு அவர் சொன்ன செய்தி தான் அனைவருக்கும் அதிர்ச்சி. அதாவது தனக்கு 25 வயது தான் ஆகிறது, மூன்று குழந்தைகள் ஆபரேஷன் செய்து பிறந்திருக்கிறது. ஆனாலும் நான் இந்த டான்ஸ்காக என்ன வேணாலும் செய்வேன் என்று அவருடைய தன்னம்பிக்கை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது பாபா மாஸ்டர் வயது வித்தியாசம் இன்றி அந்தப் பெண்ணின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications