Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.ஆர்.ராதா போன்ற காமெடி வில்லன் கவுண்டமணிக்கு விருது வழங்காதது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சினிமா துறையில் கோலோச்ச அவர் பட்ட கஷ்டங்கள், அதற்கான முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிறைய பேருக்கு வாழ்க்கை தட்டையாக போகும். காலையில் போனா மாலை வருவது, சண்டே ரெஸ்ட், மாதமானா சம்பளம், சினிமா, பீச் இப்படி ஒரே மாதிரி வாழ்ந்து காலத்தை கடந்து போனவர்கள் சமூகத்தில் அதிகம்.

television goundamani entertainment

ஆனால் வாழ்க்கையை கண் முன்னால் காட்டி நீர்வீழ்ச்சிக்கான அருகிலுள்ள படகு போல மேலே தூக்கிப் போட்டு பின் கீழே விழுந்து, அதிலேயே விழுந்து அடிபட்டதை காட்டிக் கொள்ளாமல் எழுந்து சிரித்து போராடிக் கொண்டே இருப்பது தெரியாத ஒரு வாழ்க்கை சிலருக்கு மட்டுமே அமையும். அப்படி ஒருத்தர் தான்...
கவுண்டமணி.

சாதாரண நடிகனாக ஆசைப்பட்டு நாடகங்களில் சீரியல் ரோல் செய்து கொண்டிருந்த கவுண்டமணி எம்.ஜி.ஆரோடு அதோ அந்த பறவை போல ஆட வேண்டும் பாடலில் கூட்டத்தில் நின்றதாக சொல்லப்படுகிறது. பின் சர்வர் சுந்தரத்தில் முதல் வசனம் பேசிய கவுண்டமணியை ரஜினிக்கு பிறகு 'கதவைத் திறந்து' காமெடிக்குள் அழைத்து வந்தவர் நாகேஷ்.

ஆம்... நாகேஷ் கதவை திறந்து கவுண்டமணி உள்ளே வரும் காட்சி தான் முதல் திரை நடிப்பு. அப்படி நாகேஷ், சுருளிராஜனுக்கு பிறகு அந்த ராஜபாட்டையில் கவுண்டமணி நடக்க அவர் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல. அதனாலேயே தன் அவமானங்களையும், கோபங்களையும் பிற்காலத்தில் அவர்களை கலாய்த்தே தன்னை மறைத்துக் கொண்டார் கவுண்டமணி.

80களில் பாரதிராஜா மூலம் பாப்புலர் நடிகனான போது அவர் வில்லன், சீரியஸ் ரோல்கள் தான் செய்தார். பைக் ஓட்டி வந்து நாயகி நிஷாவை ரேப் செய்யும் வில்லனாகக் கூட வந்தார் இனிமை இதோ இதோ படத்தில். ஓரிரு காமெடி வில்லனாக எம்.ஆர்.ராதா போல் வந்த அவர் முழுநேர பிஸி காமெடியனாக்கியது சுருளிராஜன் மறைவு தான். பாக்யராஜ் நடித்த புதிய வார்ப்புகளின் மூலம் அறியப்பட்ட நடிகரானார் மணி.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் படத்தின் ஹௌஸ் ஓனர் பாத்திரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நடிகரானார். பின் அவர் தான் எல்லாப் படங்களிலும் காமெடி நடிகர். அந்த நேரத்தில் கவுண்டமணி செய்த நல்ல காரியம் காமெடி ஏ.வீரப்பனை வைத்து தனக்கான தனி ஸ்க்ரிப்ட் வசனங்கள் எழுதிக் கொண்டது தான்.

நிறையப் படங்களில் மெயின் படத்தை விட கவுண்டமணியின் காமெடி தான் அதிகம் ரசிக்கப்பட்டது. ஆர்.சுந்தர்ராஜனின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் அடிநாதமான விஜய்காந்த்-ரேவதி கதையை விட அதிகமாக மக்கள் மனதில் நின்றது 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' பாத்திரம் தான். அப்படி கவுண்டமணி உச்சத்தை தொட்டார். அவருடைய காமெடிகள் தனிக் கேசட்டாகி விற்பனையில் கொடிகட்டி பறந்தன.

அவரைப் போட்டால் வியாபாரம் உச்சமாவதை அறிந்த தேவர் பிலிம்ஸார் அவரையே நாயகனாக்கி தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டனர். பிறந்தேன் வளர்ந்தேன் என்கிற அப்படத்தின் வெற்றி, அடுத்த பத்து படங்களுக்கு மணியை நாயகனாக்கியது. டூயட் பாடும் நாயகன் மணியை மக்கள் ரசிக்கவில்லை. பல படங்கள் படுதோல்வி.
மீண்டும் நகைச்சுவைக்குள் வந்தவர் செந்திலுடனான தனிக் காமெடியில் ஹிட்டடிக்க அதையே பிடித்துக் கொண்டார்.

பின் வெற்றி மேல் வெற்றி. எஸ்.எஸ்.சந்திரன் போன்ற நடிகர்கள் கவுண்டமணியை பின்பற்றி வந்தனர். கவுண்டமணி ஜோடியைப் போல் சின்னி ஜெயந்த்- வடிவேலு ஜோடி கோகுலம் படத்திலும், சின்னி- செந்தில் ஜோடி உழவன் படத்திலும் முயற்சித்தனர்.

ஆனால் கவுண்டர் இல்லாத ஜோடி உப்பு இல்லாத பக்கோடா போலவே இருந்தது.
கவுண்டமணி ஒரு நேரத்தில் நாயகனை காப்பாற்றும் நடிகராகவே வலம் வந்தார். அஜித், விஜய், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களின் வெற்றி கவுண்டமணியால் அமைந்தது.

ஜெயராம் என்கிற மலையாள புதுமுகத்தையே கவுண்டமணிக்காக மக்கள் ஏற்றுக் கொண்டனர். ராஜ்கிரண் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டமணி கால்ஷீட் கொடுத்துவிட்டு கடைசி நேரத்தில் வராததால் வடிவேலுவை மதுரையிலிருந்து வரவழைத்தார். கடைசியில் கவுண்டமணியும் வந்துவிட வேறு வழியின்றி இருவருக்குமே காம்பினேஷன் சீன் வைத்து எப்படி நாகேஷ் கதவை திறந்து கவுண்டரை கொண்டு வந்தாரோ அதேப் போல் வடிவேலுவை உதைத்து அவரின் திரை வாழ்வை துவக்கி வைத்தார்.

கருப்பு சுப்பையா, வெள்ளை சுப்பையா, ஏ.வீரப்பன், விஜயசந்திரிகா, கோவை சரளா, ஷர்மிலி, ஷகீலா, ஓமக்குச்சி, தயிர்வடை தேசிகன், கிங்காங் போன்றோர் தமிழ் சினிமா ரசிகர்களால் கவுண்டமணியாலேயே ரசிக்கப்பட்டனர். இரண்டாவது நாயகனாக கவுண்டமணி ப்ரமோஷன் பெற்ற போது பாதிக்கப்பட்டதும் இவர்களே.

இயக்குனர்கள் சுந்தர்.சி, குரு தனபால், கஸ்தூரிராஜா, ஆர்.சுந்தர்ராஜன், ரங்கராஜ் போன்ற இயக்குனர்கள் கவுண்டமணியாலேயே வளர்ந்தனர். கவுண்டமணி இல்லாது வாசு இல்லை என்பதாக இருந்தது வாசு-மணி ஜோடி.
அர்ஜுன், சரத்குமார், ராமராஜன் போன்றோர் தனித்துவமாக விளங்க கவுண்டமணியின் பங்கு பெரிதாக இருந்தது உண்மை தான்.

தன் திரை வாழ்வில் உச்சத்திலும், தாழ்ச்சியிலும் மாறி மாறி பயணித்த கவுண்டமணி இரு பத்தாண்டுகள் தமிழ் மக்களை வாழ்வின் துக்கங்களை மறந்து சிரிக்க வைத்தார் என்பது நிஜமே.
இன்றும் கோவில் பிச்சைக்காரன் வேஷத்தில் வழுக்கைத் தலையர் தலையில் தட்டும் கவுண்டரின் மீம் அதிகமாக பரப்பப்பட்ட ஒன்று.

திரையின் அவர் பங்கை திரைத்துறையினர் கணக்கிலெடுத்து அவரை விருதுக்கு பரிந்துரைக்காத காரணம் எல்லோரும் கவுண்ட மணியால் நக்கலடிக்கப்பட்டவர்ககள் என்பதாலே தான். நிச்சயம் விருதுக்கு தகுதியானவர். விருது இல்லைன்னாலும் சட்டையின் மேல் பட்டனை திறந்து விட்டுக் கொண்டு கெத்தாக அந்த கவுண்டமணி வலம் வருவார். அந்த கெத்து தான் கவுண்டமணி. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+