தென் தமிழகத்தின் சிறப்பு.. "கனியன் கூத்து" உலகறிய செய்த ஆனந்த்.. இவர் வாழ்வில் இத்தனை சோகமா?
சென்னை: தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த கனியன் கூத்து கலையை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் பிரபலப்படுத்திய ஆனந்த் முதல் முறையாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோக கதை குறித்து பேசி இருக்கிறார். அதோடு தனக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் அதில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் அறிமுகமாகும் போது பெண் வேடமிட்டு புடவையில் டான்ஸ் ஆடி அங்கிருந்த நடுவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களையும் மெய்சிலிர்க்க வைத்தவர் தான் ஆனந்த். இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் என்ற கிராமம்தான் இவருடைய சொந்த ஊராம். சின்ன வயதிலிருந்து தன்னுடைய அப்பா கனியன் கூத்து கட்டுவதை பார்த்து தானும் அதுபோல ஆக வேண்டும் என்று ஆசையோடும் அந்தக் கலையை அழிய விட்டு விடக்கூடாது என்ற வைராக்கியத்தோடும் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

முதலில் கனியன் கூத்து என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் பெண் வேடமிட்டு ஆடி பாடுபவர்கள்தான் கணியான். கிராமப்புற கடவுளுடைய வரலாறுகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் கலை தான் இந்த கனியன் கூத்து கலை.
இதில் இயல், இசை, நாடகம் என மூன்றும் கலந்து இருக்கும். அதாவது கனியன் கூத்தில், ஒருவர் அல்லது பலர் பெண் வேடமிட்டு காலில் சலங்கையோடு ஆடிக் கொண்டிருப்பார்கள். அந்த குழுவைச்சர்ந்த ஒருவர் பாட்டுபாடுவார். குழுவைச்சர்ந்த சிலர் தப்பு எனப்படும் வாத்தியம் இசைப்பார்கள். இந்த கலை தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இருக்கிறது. வெயில், மழை, இரவு பகல் என்று இந்த கலையில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும் வருமானம் குறைவுதான்.

இது குறித்த வேதனையை உணர்வு பூர்வமாக ஆனந்த் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆனந்த் பேசி இருந்தார். அதாவது ஆனந்தின் வீட்டில் அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சி என்று இவரோடு சேர்ந்து 5 பேராம். இவருடைய அப்பா கனியன் கூத்து தான் கட்டுவாராம். வருஷத்துக்கு ஆறு மாசம் வேலை இருக்கும் அதுக்கு பிறகு இருக்காது. அப்படி வேலை இல்லாத நேரத்தில் கூலி வேலைக்கு தான் போவாராம். ஆனால் அப்படி கூலி வேலைக்கு போகும்போது நீ பாட்டு படிக்கிறவன் இங்கே வந்து என்ன வேலை பார்க்க போறேன்னு பலர் கிண்டல் செய்வதால் அவருடைய அப்பா வேலைக்கு போவதையும் நிறுத்தி இருக்கிறார்.
சின்னதா ஒரு குடிசை வீடு அதுல கரண்ட் கூட கிடையாது. அதுல தான் ஆனந்த் குடும்பத்தில் எல்லோரும் படித்து வளர்ந்து இருக்கிறார்கள். அந்த நிலையில் தான் ஆனந்த்தின் அக்கா 12 ஆம் வகுப்பு பாஸ் பண்ணி இருக்கிறார். அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை பேசும் போது ஆனந்திற்கு தொண்டை அடைக்கிறது... மேலும் அவர் தொடர்கையில், அக்கா மெட்ராஸில் பிஎஸ்சி நர்சிங் படிச்சிட்டு இருக்கும்போது டாக்டருக்கு எழுதி போட்டாங்க.

அதுல சீட்டு கிடைத்ததும் டாக்டருக்கு படித்து திருநெல்வேலி ஹாஸ்பிடல்ல டாக்டரா வேலை கிடைச்சது. பிறகு அக்கா டாக்டர் ஆனதும் குடும்ப பாரம் மொத்தத்தையும் அவங்க அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க. அதற்குப் பிறகு அக்காவுக்கு கல்யாணம் ஆகி மச்சானும் எங்களுக்கு இன்னொரு அம்மா அப்பா மாதிரி எங்க குடும்பத்தை முழுமையாக பார்த்துக்கிட்டாங்க. எங்களுக்கு அந்த நேரத்தில் 16 லட்சம் கடன் இருந்து அதையும் அக்கா தான் ஏத்துக்கிட்டாங்க.
ஆனால் இப்போ மூன்று மாதத்திற்கு முன்னாடி எங்க மச்சான் தவறிட்டாரு. ஆஸ்பத்திரியிலிருந்து அக்காவை கூட்டிட்டு வரும்போது ஏற்பட்ட ஆக்சிடென்ட்ல்ல மச்சான் சம்பவ இடத்தில் இறந்து போயிட்டாரு.... அக்காவுக்கு பயங்கரமான அடி அவங்களை கேரளாவில் இருக்கிற ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். அக்காவுக்கு விஷயத்தை சொல்லாம 25 நாளா மூடி மறைத்து வைத்திருந்தோம். ஆனால் அக்கா ஒவ்வொரு முறையும் மச்சான் எப்படி இருக்காருன்னு கேட்கும்போதெல்லாம் எங்களால பதில் சொல்ல முடியல..
பிறகு அக்கா கிட்ட உண்மையை சொன்னதும் அக்கா மருந்து மாத்திரை எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அந்த ஒரு கஷ்டமான நிலையில் தான் எனக்கு ஜீ தமிழில் இருந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க கேட்டு போன் பண்ணாங்க நான் முதலில் முடியாதுன்னு சொல்லிட்டேன். பிறகு என்னுடைய கலையை உலகெங்கும் எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி என்று நினைத்து தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் கண் கலங்கிய படியே ஆனந்த் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications