Idli Kadai 1st Day Box Office: தனுஷின் இட்லி கடைக்கு 'ஃபீல் குட்' விமர்சனங்கள்! முதல் நாள் வசூல் இத்தனை கோடி தானா?
சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இண்டியா நடிகராக வலம் வருவதுடன், ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் நடிகர் தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் தான் 'இட்லி கடை'. தனது அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றுக் கொண்டாலும், பல இயக்குநர்களின் படங்களில் நடித்துத் தன்னை மெருகேற்றிக் கொண்ட தனுஷ், ஏற்கனவே 'பவர் பாண்டி' மூலம் இயக்குநராக முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து, 'ராயன்' படத்தையும் இயக்கி நடித்த நிலையில், தற்போது 'இட்லி கடை' மூலம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ஃபீல் குட் விருந்தை அளித்திருக்கிறார். இந்த படத்தில் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

தனுஷின் இட்லி கடை கதை மற்றும் நடிகர்கள்
'இட்லி கடை' திரைப்படம் நேற்று (அக்டோபர் 1) வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களை அள்ளிக் குவித்து வருகிறது. இந்தப் படத்தில், ஹீரோவுக்கான பில்டப்போ, அதிரடி சண்டைக் காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இல்லாமல், ரசிக்கத்தக்க ஒரு நல்ல கதையை இயக்கி, ரசிகர்களை உணர்வுபூர்வமாகத் தொட்டிருக்கிறார் தனுஷ்.
படத்தில், தனுஷ் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் வேலை பார்க்கிறார். அந்த ஹோட்டல் நிறுவனத்தின் முதலாளியாக சத்யராஜும், அவரது மகனாக அருண்விஜய்யும் நடித்துள்ளனர். சத்யராஜின் மகள் தனுஷைக் காதலிக்க, நல்ல பையன் என்று சத்யராஜும் சம்மதிக்கிறார். ஆனால், அருண்விஜய்க்கு உடன்பாடு இல்லை.
கல்யாணத் தேதி குறிக்கப்பட்ட நிலையில், தனுஷின் அப்பா இறக்க, அவர் ஊருக்குத் திரும்புகிறார். அப்போதுதான், "கடைசிக் காலத்தில் அப்பா அம்மாவுடன் இல்லாமப் போயிட்டோமே" என்று வருத்தப்பட்டு, அப்பா நடத்தி வந்த இட்லி கடையை எடுத்து நடத்த ஆரம்பிக்கிறார். இதன்பிறகு வரும் ஒரு பிரச்சனையால், அவர் வெளிநாடு திரும்ப முடியாத சூழல் ஏற்படுகிறது. இது, அருண்விஜய் பழிவாங்கக் காத்திருக்க, கதை உணர்வுப் பூர்வமான திருப்பங்களுடன் பயணிக்கிறது.
ராஜ்கிரண், நித்யா மேனன், இளவரசு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஜி.வி. பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் பேசும் முக்கிய மெசேஜ்
'இட்லி கடை' வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சில ஆழமான கருத்துகளையும் பேசியிருக்கிறது. "அப்பாவை மதிக்க வேண்டும், சொந்த ஊரை விட்டுப் போகக்கூடாது, குலத் தொழிலை விட்டுவிடக்கூடாது, அதுவே மன நிம்மதி" போன்ற விஷயங்களை, தனுஷ் இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இது உண்மைக்கு நெருக்கமான கதை என்பதால், குடும்பப் பார்வையாளர்களால் எளிதாகக் கனெக்ட் செய்ய முடிந்தது.
இட்லி கடை முதல் நாள் வசூல்
நேற்று காலை முதல் காட்சி வெளியானதிலிருந்தே படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வரத் துவங்கின. படம் ஒரு ஃபீல் குட் அனுபவம் என்று பலரும் பாராட்டினர். ஆனால், ஒருபுறம் கமர்ஷியல் மசாலா படங்களை மட்டுமே விரும்பிப் பார்க்கும் ஒருதரப்பு ரசிகர்களுக்கு, இந்தப் படம் பிடிக்கவில்லை. "படம் போர், முதல் பாதி வேஸ்ட், இரண்டாம் பாதி சரியில்லை" என்றெல்லாம் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

படத்தின் தலைப்பு, தொடர்ந்து ஆக்ஷன் படங்களைப் பார்த்துக் கமர்ஷியல் மனநிலைக்கு மாறிப்போன ரசிகர்களின் விருப்பம், சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தின் மன அழுத்தம் போன்ற காரணங்களால், படத்திற்குக் கூட்டம் குறைவாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
இதனால், 'இட்லி கடை' திரைப்படம் முதல் நாளான நேற்று இந்தியாவில் 10.50 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நேர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், இன்றிலிருந்து (அக்டோபர் 2) படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும், குடும்பப் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications