இதெல்லாம் அநியாயம்.. இப்போ ஒரு உயிரே போச்சே.. வரதட்சணை கொடுமைக்கு பின்னாடி! சசிகுமார் உருக்கம்
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சனை கொடுமையால் இறந்த ரிதன்யாவின் மரணம் பற்றி இயக்குனரும் நடிகருமான சசிகுமார் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். வரதட்சணை கொடுமையால் பல இளம் பெண்கள் தங்களுடைய உயிரையே விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னும் அந்த நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து சசிகுமார் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயதான பெண்ணின் தற்கொலை சம்பவம்தான் நாட்டையே உலுக்கி இருக்கிறது. அவர் இறக்கும் முன்பு பேசிய ஆடியோக்கள் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவிற்கு வலி நிறைந்ததாக இருக்கிறது. நாற்பது நாட்களுக்குள் அந்தப் பெண் பட்ட துயரங்களும் வேதனைகளும் அவருடைய கண்ணீர் நிறைந்த வார்த்தை பிரதிபலிக்கிறது.

வரதட்சணை கொடுமை
ரிதன்யா தற்கொலை குறித்து பல பிரபலங்களும், சாதாரண மக்களும் தங்களுடைய வருத்தத்தையும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 27 வயதான ரிதன்யாவிற்கு கவின் குமார் என்பவருடன் கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரிதன்யாவிற்கு பெற்றோர் 300 சவரன் நகையும், சுமார் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு காரையும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
ரிதன்யா தற்கொலை வழக்கு
ஆனால் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதலாக 200 சவரன் நகையும் பணத்தையும் கேட்டு ரிதன்யாவை தொடர்ச்சியாக துன்புறுத்தி இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமையால் மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ரீதியாக பல கொடுமைகளையும் துன்புறுத்தல்களையும் அந்தப் பெண் சகித்துக் கொண்டிருக்கின்றார். பெற்றோரிடமும் முறையிட்டும் அவர்களும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போ என்ற அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் இனி இந்த உலகத்தில் வாழவே முடியாது என்று அந்த பெண் தற்கொலை செய்து இருக்கிறார்.
ரிதன்யா தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னுடைய பெற்றோருக்கு 8 ஆடியோ செய்திகளை அனுப்பி இருந்தார். அதில் தன்னுடைய கணவர் மற்றும் மாமியார் மாமனார் தனக்கு அளித்த கொடுமைகளைப் பற்றியும் பேசி இருந்தார். ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது வரதட்சணை படுகொலை என்று அவருடைய குடும்பத்தினரும் குற்றம் சாட்டி உள்ளனர். அதோடு ரிதன்யாவிற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
சசிகுமார் வருத்தம்
அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் பேசும்போது, "இந்த வரதட்சணை என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிற ஒரு விஷயம். அந்த வரதட்சணைக்கு ஒரு உயிர் போகணும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரொம்பவும் கஷ்டமான விஷயம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டிய விஷயம் தான். அது யாரா இருந்தாலும் வரதட்சணை கொடுமை செய்வது தப்பு. இது பெரிய குற்றம். வரதட்சணை ரொம்ப தப்பான விஷயம். பணத்துக்காக ஒரு உயிரே போகுது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற குற்றங்கள் பற்றி சொல்லிக்கிட்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறது. என்று வருத்தமாக சசிகுமார் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications