இப்ப கூட அவங்க வந்தா கல்யாணம் பண்ணிக்குவேன்.. தன் முதல் காதல் குறித்து பாரதிராஜா ஓபன்
சென்னை: திரைப்படங்களில் காதலை காவியமாக காட்டிய பாரதிராஜா தன்னுடைய முதல் காதல் குறித்து பேசிய த்ரோ பேக் வீடியோ இப்போது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில், தான் ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்தேன். அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது ஆனால் அந்த பெண் இப்போது வந்தாலும் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பேட்டியில் இரு பாரதிராஜா பேசியிருக்கிறார்.
பாரதிராஜாவின் படங்கள் என்றாலே மண் மணமும், காதல் குளுமையும், மனதை மயக்கும் இசையும் ஒருங்கே அமைந்திருக்கும். கிராமப்புற படங்களில் பல வருடப் போக்கையே உடைத்தவர் பாரதிராஜா தான் என்று சொல்லலாம். தன்னுடைய 16 வயதினிலே திரைப்படத்தில் தொடங்கி தான் இயக்கிய பல திரைப்படங்களை பார்க்கும்போது ரசிகர்கள் எளிமையாக இது பாரதிராஜாவின் படமாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொள்ளும் வகையில் காட்சி அமைப்புகள் மற்றும் கேரக்டர்கள் மக்கள் மனதில் பதியும் வகையில் பாரதிராஜா பார்த்து பார்த்து இயக்கியிருப்பார்.

அதே நேரத்தில் சினிமாவில் இப்போ வரைக்கும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜாவிற்கு தான் உண்டு. அவருடைய முதல் திரைப்படமான 16 வயதினிலேவில் தொடங்கி எல்லா திரைப்படங்களிலும் ஒவ்வொரு விதமாக காதல் வெளிப்படும். சினிமாவில் மட்டுமல்ல இவருடைய நிஜ வாழ்க்கையிலும் காதல்தான் இவரை பெரிய அளவில் பாதித்தது என்று ஒரு பேட்டியில் பாரதிராஜா பேசியிருக்கிறார்.
அதில் பாரதிராஜா பேசுகையில், நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் சில காரணங்களால் அது திருமணத்தில் சேரவில்லை. பல வருடங்கள் கழித்து நான் அந்தப் பெண்ணை ஒரு முறை பார்த்தேன். நான் என்னுடைய சகோதரிகளோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பூக்கடையை பார்த்ததும் என்னை அறியாமல் அந்த கடையில் காரை நிறுத்த சொன்னேன்.
என்னுடைய சகோதரிகள் எல்லாம் என்ன ஆச்சு எதற்காக இங்க கார நிறுத்துறீங்க என்று கேட்டார்கள். நான் அந்த பூக்கடையில் நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன் தலைமுடி எல்லாம் வெள்ளை ஆகி இருந்தது. ஆனாலும் எனக்கு மனதிற்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. உடனே நான் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணிடம் சென்றேன். அங்கு பார்த்தால் நான் காதலித்த அதே பெண்தான் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை பார்த்ததும் நான் உன்னை தான் வீட்டிற்கு வந்தேன் அங்கே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்ல எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
அவங்க டக்கென்று கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை கொடுத்து என்னுடைய பேத்தியின் கல்யாணம் வந்துவிடு என்று சொல்ல, எனக்கு சிரிக்கவா அல்லது பேசவா என்று சொல்லத் தெரியாத நிலையில் இருந்தேன். பிறகு மீண்டும் அவங்களே கண்டிப்பாக கல்யாணத்துக்கு வருவியா என்று கேட்க, வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். பிறகு என்னுடைய சகோதரிகளிடம் நான் அவரைப் பற்றி சொன்னபோது உனக்கு எப்படி அவங்க பூக்கடையில் திரும்பி நிற்கும் போது கூட இது அவங்கதான் என்று தெரிந்தது என்று சொல்ல அதுதான் ஃபீலிங் காதல் என்று சொன்னேன்.
எந்த இடத்தில் நமக்கு பிடித்தவர்கள் நின்றாலும் நம்முடைய மனம் ஒரு பூரிப்பு அடையும். அந்த உணர்வு தான் எனக்கு அன்று ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஒரு நாள் எங்க வீட்டுக்கு அவங்க வந்தாங்க. அந்த நேரத்தில் எங்களுடைய அம்மா உயிரோடு இருந்தாங்க. அம்மா அவங்களை வாமா என்று வரவேற்று காபி சாப்பிடுறியா என்று கேட்டாங்க.

உடனே அவங்க வேண்டாம் இருங்க நான் போய் போட்டுட்டு வரேன் என்று கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாங்க பாருங்க.. அந்த காபியை வாங்கி நான் குடிச்சேன். அவ்வளவுதான்... என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சு அவள் கையால் ஒரு கப் காபி குடித்தது எனக்கு பெரும் ஆனந்தமாக இருந்தது. காதல் எப்போதுமே யாருக்கும் முடிவுக்கு வராது. பள்ளிக்கூடத்துக்கு போகும்போது அவங்க திரும்பிப் பார்த்தா அது நம்மள தான் பாக்குறாங்கன்னு சந்தோஷப்படுறது.. அதெல்லாம் வேற மாதிரி ஒரு ஃபீலிங்.
நான் இப்ப கூட ஒன்னு சொல்லுவேன் ஆனா அது சொன்னா தப்பா போயிரும்னு தோணுது.. இப்பவும் அந்த பொண்ணு திரும்ப வந்தா நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனால் கல்யாணம் பண்ணிக்கிட்டா காதல் இருக்குமா? என்று கேட்டால் கஷ்டம் என்றுதான் சொல்லுவேன். காதல் காதலாகவே இருக்கட்டும் என்று அந்த பேட்டியில் கலகலப்பாக பாரதிராஜா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications