விஜய் சேதுபதி செய்த செயலால் மனநலம் பாதிக்கப்பட்டேன்! அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியல! சேரன் வருத்தம்
சென்னை: தமிழ் சினிமாவின் யதார்த்தமான கதைகளுக்கும், சமூகச் சிந்தனை கொண்ட திரைப்படங்களுக்கும் அடையாளமாகத் திகழ்பவர் இயக்குநர் சேரன். தனது படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதைத் தொட்ட சேரன், தற்போது மீண்டும் படம் இயக்க வாய்ப்புகள் தேடி அலைந்த அனுபவம் குறித்தும், அதில் முன்னணி நடிகர்களால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்தும் மனம் திறந்து பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யதார்த்த சினிமா நாயகன்
இயக்குநர் சேரன், தனது திரைப்படங்கள் மூலம் எப்போதும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர்.1997-ஆம் ஆண்டு 'பாரதி கண்ணம்மா' திரைப்படம் மூலம் இயக்குநராகக் களமிறங்கினார். *'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
சாதனை படங்கள்
இதில் அவர் இயக்கி, நடித்த 'ஆட்டோகிராப்' மற்றும் 'தவமாய் தவமிருந்து' ஆகிய இரண்டு படங்களும், ஒருவரது வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்து, தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்களின் பட்டியலில் இன்றும் நீடிக்கின்றன. 'ஆட்டோகிராப்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த பல வருடங்களாகவே சேரன் முழுநேர நடிகராக மாறி, 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சேரனை உலுக்கிய நிராகரிப்பு
மீண்டும் படம் இயக்கத் தீவிரமாக முயற்சி செய்த சேரன், முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, விஷால் போன்ற பல நடிகர்களிடம் கதை சொல்லி வாய்ப்பு தேடினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இந்த அனுபவம்தான் சேரனைப் பெரிதும் பாதித்துள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சேரன், நடிகர் விஜய் சேதுபதி குறித்தும், அவரால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
"விஜய் சேதுபதிக்காக நான் ஒரு கதையை எழுதினேன். மிகவும் நல்ல கதை. மிகவும் முக்கியமான படம். அது இல்லைங்கிறப்ப எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. ஆனா எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். மனநிலை பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போயிட்டேன். அதுல இருந்து மீண்டு வரவே ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு கதையை யோசித்து எழுதி அதை டெவலப் பண்ணி வச்சா, அந்த கஷ்டத்தை உணராமல் அந்த நடிகர் வேணாம்னு சொல்லிட்டுப் போறது கஷ்டமா இருக்கு. சினிமாவுல கதையை நேசித்து வர்றவங்க ரொம்பக் கம்மி ஆயிட்டாங்க" என்று சேரன் புலம்பியிருக்கிறார்.
ஒரு கதையின் படைப்பாளியாக அவர் பட்ட உழைப்பு வீணானதால், மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் பேச்சின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
மக்கள் செல்வன் - விஜய் சேதுபதி
சேரனின் விமர்சனத்திற்கு உள்ளான நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கலைஞராக இருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பின்னர் 'தென்மேற்குப் பருவக்காற்று' மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' மூலம் கிடைத்த பெரும் வெற்றி, அவரை 'மக்கள் செல்வன்' ஆக மாற்றியது. எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் அவரது தனித்துவமான பாணி, அவரைப் பல இயக்குநர்களின் விருப்பத் தேர்வாக மாற்றியுள்ளது.
'விக்ரம் வேதா', '96', 'மாஸ்டர்', 'விக்ரம்' எனத் தமிழ் மட்டுமல்லாமல், தற்போது ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் வில்லனாகவும், முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்று வருகிறார். சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக அறியப்படும் விஜய் சேதுபதி, சேரனின் கதையை நிராகரித்தது ஏன் என்ற கேள்வி, இப்போது கோலிவுட் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. சேரனின் இந்தக் குமுறல், சினிமாவில் படைப்பாளிகளின் வலியை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications