“பச்சை துரோகி.. முதுகில் குத்திவிட்டான்” நடிகரை பற்றி ஆதங்கப்பட்ட மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
சென்னை: 'மதயானைக் கூட்டம்' 'இராவண கோட்டம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் காலமானார். முதல் படத்தின் மூலமே கவனம் ஈர்த்திருந்தாலும் விக்ரம் சுகுமாரனுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனக்கு ஒரு நடிகர் துரோகம் செய்துவிட்டதாக முன்பு கூறி இருந்தார் விக்ரம் சுகுமாரன்.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.

அதைத்தொடர்ந்து, 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்படும் படமாக இருக்கிறது. ஆனாலும், 'மதயானைக் கூட்டம்' படத்துக்கு பிறகு விக்ரம் சுகுமாரனுக்கு தொடர்ச்சியாக இயக்குநர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பல ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாக கவனம் பெறவில்லை. அந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தன் மீது சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனையுடன் கூறி இருந்தார் விக்ரம் சுகுமாரன்.
மேலும், தனக்கு ஒரு நடிகர் துரோகம் செய்துவிட்டதாக அந்த சமயத்தில் விக்ரம் சுகுமாரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன். பச்சை துரோகி... கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான். முதுகில் குத்திவிட்டான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை" எனக் கூறி இருந்தார். விக்ரம் சுகுமாரனின் அந்தப் பதிவு சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறிய போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் விக்ரம் சுகுமாரன் காலமானார். விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications