மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனு சொன்னதுமே ரஜினியின் கண் முன் வந்தவர் யார் தெரியுமா? உருக்கம்
சென்னை: மூன்று முகம் படத்தில் ரஜினிகாந்திடம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் குறித்து சொன்னதுமே அவர் நினைவுக்கு வந்தது யார் தெரியுமா? இந்த வேடத்திற்காக கஷ்டப்பட்டாராம் ரஜினி.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் தன் படங்களில் ஒரே மாதிரி தோற்றத்துடன் தான் அதிகமாக நடித்திருந்தார். அதிக மாற்றங்கள் இல்லாமல் தான் வருவார். ஆனால் இரட்டை வேடப் படங்கள் என்றால் கொஞ்சமாவது முயற்சி செய்து தோற்றத்தை வேறுபடுத்தி காட்டுவார்.
அவர் இரட்டை வேடப் படங்களில் ஆள் மாறாட்டக் கதை என்றால் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.

அதனால் வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரி வருவார். உதாரணத்துக்கு ராஜாதிராஜா, போக்கிரிராஜா, அதிசய பிறவி, தர்மத்தின் தலைவன் படங்களில் ஒரே மாதிரி தான் அவரும் இருப்பார். காரணம் கதைப்படி இவருக்கு பதில் அவர் வரவேண்டியதால். அதில் கூட அதிசயப் பிறவியில் கிராமத்தானாக டிரவுசர் எல்லாம் போட்டு காமெடி வேடத்தில் கொஞ்சம் வித்தியாசம் காட்டி இருப்பார்.
தர்மத்தின் தலைவனில் ப்ரஃபசர் பாத்திரத்துக்கு வேட்டி கட்டி, நெற்றி நிறைய விபூதி பூசி வருவார். பாட்சா படத்தின் கதையை சுரேஷ்கிருஷ்ணா சொன்னதும் ரஜினி உடனே போய் மாணிக்கத்தை விட பாட்சா வேறு மாதிரி தெரிய வேண்டுமென அவரே உருவாக்கிய தோற்றம் தான் நாம் படத்தில் காணும் அந்த மாணிக்-பாட்சா. சந்திரமுகி படத்தில் பி.வாசு வேட்டையனாக ரஜினி நடிக்கப் போகிறார் என்றதும் ரஜினி உடனே அங்கேயே வேட்டையனைப் போல நடந்து காட்டி 'லகலகலகலக' சொல்லி நடித்துக்காட்டியதாக பி.வாசு ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார்.
நெற்றிக்கண் படத்தில் தந்தை மகன் பாத்திரத்தில் மேக்கப் வேற்றுமைகளோ நடிப்பிலும் நன்றாக வேறுபடுத்தி நடித்திருப்பார். மகன் சந்தோஷ் நேர்மையானவன் என்பது பாடி லேங்க்வேஜிலேயே தெரியும் படி நடித்திருப்பார். சக்ரவர்த்தியாக வரும் அப்பா ரஜினியிடம் ஒரு மிடுக்கு இருக்கும். ஜானி படத்தில் ஜானி ரஜினியின் உடைகளை ஸ்டைலாக வடிவமைத்திருப்பார் ஓவியர் ஜெயராஜ்.
ஆம்....காஸ்ட்யூம்ஸ் டிசைன் ஓவியர் ஜெயராஜ் வரைந்து கொடுக்க அதைப் போலவே தைத்தார் காஸ்ட்யூமர். ஜானியின் டெனிம் கோட்டு, எழுத்து போட்ட டீஷர்ட் எல்லாம் ஜெயின் கை வண்ணம். வித்யாசாகர் என்கிற பார்பர் ரஜினியை வேறுபடுத்திக்காட்ட ஓவியர் ஜெயராஜ் கெட்டப்பையே எடுத்திருப்பார் மகேந்திரன். கண்ணாடி, தொங்குமீசை எல்லாம் ஜெயராஜின் ஸ்டைல்.
மூன்று முகம் படம் தொடங்கியதுமே அலெக்ஸ் பாண்டியன் என்கிற நேர்மையான போலீஸ்காரராக நடிக்கப் போகிறோம் என்றதுமே ரஜினிக்கு ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர் யாருமல்ல தந்தை ராமோஜிராவ் தான். அவரும் போலீஸ்காரரல்லவா?. அவர் போட்டோவை வைத்து அவரைப் போலவே மேக்கப் போட முயற்சி செய்தனர் மேக்கப் டீம். விக் தந்தை போல் வித்தியாசமாக வைக்கப்பட்டு இருந்தாலும் ரஜினியின் தந்தையின் முகம் நீளமானது. ரஜினிக்கோ உருண்டை வடிவம். முகத்தை நீளமாக்க இரண்டு கடைவாய் உள்பக்கம் விசேஷமாக பல் டாக்டரால் தயாரிக்கப்பட்ட தாடை போன்ற பொருளை வாய்க்குள் வைத்திருப்பார்.
பேசும் போது அது வெளியே வராமல் பேச வேண்டும். கொஞ்சம் சிரமத்தோடு தான் அலெக்ஸ்பாண்டியன் வசனம் பேசுவதாக தோன்றும். இரண்டாவது அருண் பாத்திரம் ரஜினியின் சாதாரண தோற்றம். இப்போது ஜான் என்கிற ரஜினியை வேறுபடுத்த நீக்ரோ டைப்பில் விக்கும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து வருவார். சாராயம் குடிக்கும் ஸ்டைலை மாற்றி கையை வாயருகே வைத்து தண்ணீர் பைப்பில் குடிப்பது போல் குடிப்பார்.
பாத்திர வேறுபாட்டுக்காக செய்யப்பட்டாலும் ஜான் பாத்திரம் ரஜினியின் இரண்டாவது அண்ணன் மறைந்த நாகேஸ்வரராவ் கெய்க்வாட் முகத்தோடு ஒத்திருந்தது ஆச்சரியமான அதிர்ச்சி... மூன்று முகங்கள். ரஜினி, அப்பா, சகோதரர் கதாப்பாத்திர ஒப்பனை போலவே நிஜங்களும்..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications