கொல்லங்குடி கருப்பாயிக்கு என்ன அவசரம்? 3 மாசம் இருந்திருக்கலாம்! கடைசி ஆசையும் நிறைவேறியிருக்குமே!
சென்னை: நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி தனது ஆசையை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் இறந்துவிட்டதால் அவருடைய ஆசை நிறைவேறாத ஆசையாகிவிட்டது. இதனால் அவருடைய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி. இவர் நாட்டுப்புற பாடகி. ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் வி.கே.ராமசாமியின் தாயாகவும் பாண்டியன், பாண்டியராஜனின் பாட்டியாகவும் நடித்திருந்தார்.
பின்னர் கோபாலா கோபாலா, ஆயுசு நூறு, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தார்.
இயக்குநர் சசிக்குமார்
கருப்பாயி, கடைசியாக இயக்குநர் சசிக்குமார் இயக்கிய காரி திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது கணவர், மகள் இறந்த நிலையில் கொல்லங்குடியில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் ஜெயலலிதாவிடம் வைத்த கோரிக்கையால் கொல்லங்குடியில் உள்ள அரசு பள்ளிக்கு பட்டா கிடைத்தது.
வயது மூப்பு
இந்த நிலையில் கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக இன்று காலை 8 மணிக்கு காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் 3 மாதம் கருப்பாயி உயிருடன் இருந்திருந்தால் அவருடைய ஆசை நிறைவேறியிருக்கும். ஆனால் அதற்குள் அவசரப்பட்டுட்டாரே!
ஆசை
அப்படி என்ன ஆசை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க! கொல்லங்குடி கருப்பாயி கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கருப்பாயி கூறுகையில், ஆண் பாவம் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் என் கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
சம்பளம் இல்லை
மீதி சம்பளத்தை எனக்கு அனுப்புவதாகவும் சொல்வார்கள். ஆனால் அது வரவே வராது. நானும் சம்பளம் இன்னிக்கு வரும் , நாளைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருப்பேன். எனக்கு பிள்ளை இல்லை என்ற குறையை போக்கியது நடிகர் பாண்டியராஜன்தான்.
பாண்டியராஜன் என் மகன்
நான் சென்னைக்கு போனால் என்னை பார்க்காமல் இருக்க மாட்டார். நான் சினிமாவில் நடித்தாலும் என்னை நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கவே இல்லை. பிறகு எனது பேரன் விஷால்தான் எனக்கு நடிகர் சங்க உறுப்பினராக்கி அடையாள அட்டையை கொடுத்தார்.
பேரன் விஷால்
நான் சாப்பிடும் சாப்பாடு பேரன் விஷால் கொடுக்கும் பணம்தான். என்னை வாழ வைக்கும் சாமி அவர். விஷால் கல்யாணத்துக்கு போகணும், அதுவரை என் உசிரு இருக்கணும். அது போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போகணும்னு ஆசை, அது நிறைவேறுமா என கருப்பாயி உருக்கமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
9 ஆண்டுகள்
இந்த நிலையில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும்தான் திருமணம் என நீண்ட காலமாக விஷால் சொல்லி வந்தார். அது 3 ஆண்டுகளில் கட்டப்படும் என சொல்லப்பட்ட நிலையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால் அந்த கட்டடத்தை கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆகின.
ஏன் அவசரம் பாட்டி?
இந்த நிலையில் நடிகர் விஷால், தற்போது நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுடைய காதல் திருமணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டடத் திறப்பு விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அடுத்த முகூர்த்தமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. இந்த கொல்லங்குடி கருப்பாயி இன்னும் 3 மாதங்கள் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஆசையை கண் குளிர பார்த்திருப்பார். ஆனால் எமதர்மன் அவரை அவசரமாக அழைத்துச் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications