Gangai Amaran: இளையராஜா காப்பிரைட் கேட்க கூடாதுன்னா இதை பண்ணனும்! வெளிப்படையாக பேசிய கங்கை அமரன்
சென்னை: தமிழ் திரையுலகில் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்பிரைட் கேள்வி எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது தம்பியும், பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்பிரைட் கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்டது. "ஆமாம், அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது 'இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது' என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்பிரைட் கேட்கிறார்" என்று தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

முழு பாடல் பயன்பாடு
ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்பிரைட் பட்டியலில் வராது. ஆனால், ஒரு பாடலையும் அப்படியே முழுவதுமாக பயன்படுத்தினால் அது கண்டிப்பாக காப்பிரைட் தானே வரும்? 'பொட்டு வெச்ச தங்கக்குடம்', 'சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா' போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை, முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் அங்கப் பிரச்சனையே வருகிறது" என்று கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
மனிதனின் சுயசிந்தனைக்கு ஆபத்து
அதே சமயம், இப்போது ஏஐ மூலம் இசையை உருவாக்குவது பற்றியும் கங்கை அமரன் கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்: "இப்படி உருவாக்குவது நம்முடைய சொந்த பாடலாக இருக்காது. அந்த செயற்கை அறிவு நாம் ஒரு விதமாகப் பாடல் கேட்டால் அது வேறு ஒரு விதமாகக் கொடுக்கும். அதைக் கேட்கும்போது நன்றாக தான் இருப்பது போல இருக்கும், ஆனா அது நம்முடைய மூளையில் உருவான பாடல் கிடையாது, அதுக்கு நாம சொந்தம் கொண்டாட முடியாது" என்று தெரிவித்தார்.
மனித வேலைகள் பறிபோகும்
இந்த ஏஐ - யால் பலருடைய வேலையும் பறிபோக போகுது, அது தேவையே இல்லாதது. அதனால் மனிதன் அவனால் சுயமாக யோசிக்க முடியாத சூழ்நிலை வரப்போகிறது, அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது" என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
வனிதா விவகாரம்
கங்கை அமரன் அண்ணனுக்கு ஆதரவாக பேசியிருந்தாலும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒரு முரண்பாடான கேள்வியை எழுப்பி வருகிறார்கள்: "கங்கை அமரன், இளையராஜாவிடம் அனுமதி கேட்டு இருந்தால் அவர் காப்பிரைட் கேட்க மாட்டார் என்கிறார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நடிகை வனிதா தயாரித்து இயக்கிய 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடலை வைப்பதற்கு அவரிடம் அனுமதி கேட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்த பிறகும், அந்த பாடலைப் பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறாரே, அது எந்த வகையில் நியாயம்?" என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒருவர் கஷ்டப்பட்டு உருவாக்கியதை இன்னொருவர் இலகுவாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று இளையராஜாவுக்கு ஆதரவாகக் கங்கை அமரன் பேசியிருந்தாலும், முன்னர் நடந்த சம்பவங்களை வைத்து இளையராஜா மீதான விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications