மணிரத்னத்தின் பம்பாய் படம் இப்போது வெளியானால் தியேட்டர்கள் எரிக்கப்படும்! ராஜீவ் மேனன் ஷாக்
சென்னை: பம்பாய் போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால் திரையரங்குகள் எரிக்கப்படும் என ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் பம்பாய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் நடந்த வன்முறையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. அது போல் இரு மதங்களை சேர்ந்தவர்களுக்கிடையே நடந்த காதலையும் அழகாக சொல்லியிருந்தது.
இந்த படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தில் காட்டப்பட்ட கலவரத்தின் போது அரவிந்த்சாமியின் குழந்தைகள் காணாமல் போய்விடுவார்கள். அப்போது நடந்த தீவிபத்தில் அரவிந்த்சாமி- மனிஷாவின் பெற்றோர் இறந்துவிடுவார்கள். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அது போல் பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் அருமையாக இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
அந்த அரபிக் கடலோரம் பாடலை ரகுமான் பாடியிருந்தார். அது போல் கண்ணாளனே பாடலை சித்ராவும் உயிரே உயிரே பாடலை ஹரிஹரன்- சித்ராவும் பாடியிருந்தனர். குச்சி குச்சி ராக்கம்மா பாடலை ஹரிஹரனும் சுவர்ணலதாவும் பாடியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த படம் குறித்து அவர் கூறியதாவது: " பம்பாய் போன்ற படத்தை இன்றைய கால கட்டத்தில் எடுக்கவே முடியாது. இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாகிவிட்டது. மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது.
பம்பாய் போன்ற படத்தை எடுத்து அதை தியேட்டரில் வெளியிட்டால், தியேட்டர்கள் எரிக்கப்படும் என நான் நினைக்கிறேன். அந்த திரைப்படம் வெளியாகி 25 அல்லது 30 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இந்தியாவில் தற்போது சகிப்புத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது.
இசையமைப்பாளர் ரகுமானுக்கும் மணிரத்னத்திற்கும் இந்தி தெரியாது. இதனால் நான் அவர்களுக்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் ரகுமான் வீட்டில் ஒரு விவகாரத்தில் பெரும் அழுத்தம் அவருக்கு ஏற்பட்டதையும் அதை அவருடைய இசையால் போக்கிக் கொண்டார் என்றும் ராஜீவ் மேனன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications