கமலின் இந்த பாடலை இப்போ கேட்டாலும் எல்லோரும் அழுவாங்க! எமோஷனலாக பேசிய ரஜினிகாந்த்! நெகிழ்ந்த இளையராஜா
சென்னை: திரையுலகில் அரைநூற்றாண்டு காலமாகத் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரமாண்ட விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்படப் பல அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு, ஒரு வாழும் இசைப் புராணத்தை கௌரவித்தனர்.

அன்பு, வெற்றி, துரோகம்
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் இசை தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்திருப்பதாகத் தெரிவித்தார். "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல் வந்தவனை யாரடித்தாரோ போன்ற பாடல்களைக் கேட்கும்போது அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துவார்கள். அந்த அளவுக்குப் பாடல்களில் ஆத்மார்த்தம் நிறைந்திருக்கும். தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைத்தால், அதன் அருமை தெரியாது. தோல்விகள் ஏற்படும்போதுதான் வெற்றியின் அருமை புரியும்" என்று பேசினார்.
ரஜினிகாந்த் பேச்சு
மேலும், ஒரு புதிய இசையமைப்பாளர் வந்தவுடன், இளையராஜாவுடன் பணிபுரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் என அனைவரும் அவரை விட்டு விலகியதாக ரஜினி மனம் திறந்து பேசினார். "ஆனால் அதைப்பற்றி அவர் எந்தக் கவலையும் படவில்லை" என்று அவர் பேசியது, இளையராஜாவின் மனவலிமையையும், அவரது கலை மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
கமல்ஹாசனின் பேச்சு
ரஜினிகாந்தைப் போலவே, கமல்ஹாசனும் இளையராஜாவுடன் தனது நீண்ட காலப் பயணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். "நான் இளையராஜாவுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தோழனாக, ஒரு ரசிகனாகப் பழகி வருகிறேன். எனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அவரது இசை எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத எனது கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அவர் இசையால் எளிதாகப் புரிந்து கொண்டு, திரையில் பிரதிபலித்தார். அதுவே எங்கள் இருவரின் நட்பின் ஆழத்திற்குச் சான்று" என்று கமல்ஹாசன் பேசியது, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இளையராஜா பேச்சு
அனைவரின் பாராட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட இளையராஜா, தனது நன்றியைத் தெரிவித்தார். தனது பேச்சின் முடிவில், ஒரு சின்ன ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும் என்னுடைய திரையுலக 50 வருட வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் அதில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் சொல்லாதது எனக்கு ஒரு சிறு விஷயமாக இருந்தாலும், அது ஒரு விஷயமாக எனக்குப் பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்" என்றார்.
ஒரு கலைஞர், தனது படைப்புகளும், பயணங்களும் மக்களால் நினைவுகூரப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதை, இளையராஜாவின் இந்த வார்த்தைகள் உணர்த்தின. இன்றும், முதல் இந்தியராக மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் நிகழ்த்தி சாதனை படைத்திருக்கும் இளையராஜா, ஒரு சாதனையாளராக மட்டுமல்லாமல், மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இசைஞானியாகவும் திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications