James Vasanthan: இசை நிகழ்ச்சியில் சாமி ஆடி டிராமா போடுறாங்க! சூப்பர் சிங்கரை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!
சென்னை: பிரபல இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், தற்போது தொலைக்காட்சியில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் பற்றித் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இசை நிகழ்ச்சிகளின் தரம் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்
ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, தனக்குத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெரிய உடன்பாடு கிடையாது என்று தெரிவித்தார். "அது சினிமா பாடல்களுக்கு காட்சிப் பொருளாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒன்றுமே இல்லாததற்கு இந்த நிகழ்ச்சி பரவாயில்லை என்று கூடச் சொல்லலாம். குறிப்பா, விஜய் டிவியில் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியெல்லாம் நடத்திட்டு இருந்தாங்க. அப்போ பல பாடகர்கள் வெளி உலகத்துக்குத் தெரிய வந்தாங்க. பல தொழில்முறைப் பாடல்கள் உருவாக்கப்பட்டன. இது இப்போதில்லை, ஆரம்பத்தில் இருந்த ஒரு 10-15 வருஷத்துக்கு உள் நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்" என்று கூறினார்.
அப்போது அனந்து போன்றவர்கள் இருந்தார்கள். அவரெல்லாம் ஒவ்வொருவரையும் பட்டை தீட்டி வெளியே அனுப்பினார். ஆனா இப்போதெல்லாம் வணிக ரீதியாக நிகழ்ச்சியை நடத்தி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடகம் தான் நடக்கிறது
இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி என்று நடத்திவிட்டு சம்பந்தமே இல்லாம 'பக்தி சுற்று' என்று வைத்து சாமி ஆடுவது, அழுகைக் காட்சிகள், சம்பந்தமில்லாத உடை அணிகள் போன்றவை எல்லாம் பயன்படுத்துவது எனக்குச் சுத்தமா பிடிக்கவே இல்லை என்று சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கும் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் ஒரு சினிமா இசையமைப்பாளராக பலருக்கும் தெரியும். இவர் முதலில் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சப்தஸ்வரங்கள்' என்ற பிரபலமான இசை போட்டி தொடரில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல், பல இசைப் போட்டித் தொடர்களிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 'சுப்பிரமணியபுரம்' என்ற படம் மூலம் இசையமைப்பாளராகத் திரையுலகில் அறிமுகமானார். அதன் பாடல்கள் பெரிய வெற்றிபெற்றன. ஜேம்ஸ் வசந்தன் சமூக பிரச்சனைகள் மற்றும் கலைப் படைப்புகள் பற்றித் தன்னுடைய கருத்துக்களை எப்போதுமே வெளிப்படையாகப் பதிவு செய்வார். குறிப்பாக, அவர் இசை நிகழ்ச்சிகள் குறித்துப் பேசும்போது அதில் நடக்கும் நகைச்சுவைகள், நாடகங்கள் பற்றியும் விமர்சித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இந்த விமர்சனம், தொலைக்காட்சித் துறையினர் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications