”நான் பொறாமைப்படும் நடிகர் நீங்கள்” கமல்ஹாசன் சொன்ன வார்த்தை.. கண்ணீருடன் நின்ற மலையாள நடிகர்!
சென்னை: இந்திய சினிமா நடிகர்களில் தன்னையே பொறாமைப்படுத்திய நடிகர் யார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருக்கிறார். மலையாள சினிமாவான ரெட்டா படத்தில் நடித்த நடிகரான ஜோஜு ஜார்ஜின் நடிப்பை பார்த்து வியந்ததாகவும் கூறிய அவர், இரட்டை வேடத்தில் அவ்வளவு வித்தியாசத்தை காட்டியதாகவும் பாராட்டி இருக்கிறார்.
இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களை எடுத்தால், அதில் முதலில் இருப்பவர் கமல்ஹாசன். நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்ற அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் கமல்ஹாசனின் திறமையையும், படங்களையும் கண்டு பொறாமைப்படாத நடிகர்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் சமகாலத்தில் அவரே பொறாமைப்பட்ட நடிகர் யாரென்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.

தக் லைஃப் விளம்பரப் பணிகள்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஷு ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமல் பொறாமைப்படும் நடிகர்
அந்த வகையில் சென்னையில் நேற்றிரவு தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சிம்பு-வுக்கும் நான் சித்தப்பா தான். அவருக்கு அப்படிதான் சொல்லி வளர்த்தார்கள். டி.ராஜேந்தர் படம் பார்க்கும் போது, சந்தோஷமான காட்சியில் கூட அவர் நிச்சயம் கண்ணீருடன் தான் இருக்கப் போகிறார்.
கமல்ஹாசன் பேச்சு
இத்தனை தலைமுறையினருடன் நான் தோள் உரசி இருக்கிறேன் என்பதை நினைத்து பார்க்கும் போது.. என்ன சொல்லிட முடியும்.. நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி ஒவ்வொரு நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் குறித்து பேசி வந்தார். அப்போது, இந்த ஜோஜு ஜார்ஜ் யாரென்றே எனக்கு தெரியாது. திடீரென "ரெட்டா" என்று ஒரு படத்தில் பார்த்தேன்.
ஜோஜு ஜார்ஜ் திறமை
என் சினிமா வாழ்க்கையில் 30க்கும் அதிகமான படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று மேக் அப் அல்லது கெட்டப் மாற்றுவேன். மைக்கில் மதன காமராஜன் படத்தில் மட்டும் ஒரே மாதிரி மேக்கப் வித்தியாசம் இல்லாமல் செய்திருப்பேன். ஆனால் ஜோஜு ஜார்ஜ் ஆரம்பக் கால படத்திலேயே அசத்தி இருக்கிறார்.
பொறாமைப்படும் நடிகர்
ரெட்டா படத்தில் இரட்டை சகோதரர்கள் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் இருப்பார்கள். அதில் எந்த கதாபாத்திரம் யார் என்று தனியாக தெரியும். ஜோஜு, நீங்கள் நான் பொறாமைப்படும் நடிகர்களில் ஒருவர். புதிதாக நடிக்க வந்தவர்கள் அல்ல.. நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கூட போட்டி என்று நினைப்பவன் நான். அவர்களை வரவேற்க வேண்டியதும் என் கடமைதான். அதனை அனைவரும் செய்ய வேண்டும்.
ஆனந்தக் கண்ணீர்
சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என்று நினைத்த போது, என்னை சினிமாவில் இருக்க வைத்தவர்களில் நீங்களும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். அப்போது ஜோஜு ஜார்ஜ் எழுந்து நின்று நன்றி தெரிவித்ததோடு, ஆனந்தத்தில் கண்ணீர்விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இடையே ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications