சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு kpy பாலா 2 லட்சம் உதவி.. “இந்த” பகுதி மக்களுக்கு ஆயிரம் ரூபாய்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான பாலா இன்று மாலை அவரது குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 1000 வீதம் 200 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க இருக்கிறார்.
நடிகர் சூர்யா, கார்த்திக், ஜி.வி பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் வரிசையில் பாலா செய்திருக்கும் உதவி பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவானது. இதனால் சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகள் நிரம்பி விட்டதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6000க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கடைகளிலும் பெட்ரோல் நிலையங்களிலும் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். வெள்ளித்திரை பிரபலங்களான சூர்யா, கார்த்திக் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பண உதவி செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர். அதுபோல விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இந்த வரிசையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா இன்று மாலை அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க இருக்கிறார்.
ஏற்கனவே பாலா தான் வாங்கும் சம்பளத்தில் ஆதரவற்றர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அறந்தாங்கி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து ஈரோடு சத்தியமங்கலம் மலை கிராமத்தில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கி இருந்தார். அது மட்டும் அல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி மற்றும் கடப்பாரை போன்று வேளாண் உபகரணங்களும் வாங்கி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தன்னை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்திருந்தாலும் பாலா தொடர்ச்சியாக தன்னால் முடிந்த உதவிகளை எளியோர்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். இது பலருடைய பாராட்டுகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறது. அது போல பாலா வெல்கம் தியேட்டர் அருகில் அனகாபுத்தூர் பகுதியில் வைத்து உதவித்தொகை வழங்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications