பிரேக் அப் வலியில் இருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது.. அங்கே நடந்தது பலருக்கு தெரியாது! லாஸ்லியா உருக்கம்
சென்னை: இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தான். கொஞ்சி கொஞ்சி பேசும் இலங்கைத் தமிழும், இயல்பான நடத்தைவும், குடும்ப பாசமும் ரசிகர்களின் மனதில் அவருக்கு தனி இடத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளராக பார்க்கப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சியின் முக்கியமான முகமாக மாறினார்.

ரசிகர்கள் கொண்டாடிய உறவு
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவின் உடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் காதலாக பேசப்பட்டது. இவர்கள் பேசும் ஒவ்வொரு காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது. கவின் வெளியேறியபோது லாஸ்லியா உருக்கமாக அழுத காட்சி, ரசிகர்களிடையே "உண்மையான காதல்" என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் "கவிலியா" என்ற பெயரில் இவர்களின் ஜோடி தொடர்ந்து ட்ரெண்டாகி வந்தது.
ஆனால் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் தனித்தனியாக தங்களது வாழ்க்கைப் பாதையில் சென்றனர். இதனால் இவர்களின் உறவு குறித்து பல வதந்திகள் பரவின. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அந்த பிரிவு குறித்து லாஸ்லியா விரிவாக பேசியுள்ளார்.
மீண்டு வர ஒரு வருடம் ஆனது
லாஸ்லியா சமீபத்தில் பேசும்போது தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரேக் அப் வலியில் இருந்து வெளியே வந்து மனதளவில் மீள்வதற்கு ஒரு வருடம் ஆனதாக லாஸ்லியா கூறியுள்ளார். வெளியிலிருந்து பார்க்கும் போது "ஏன் பிரிந்தார்கள்" என்று தான் தோன்றும். ஆனால் அந்த நிலையை கடப்பது மிகவும் கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த உறவு நமக்கு சரியாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டிய நேரத்தில் அது தேவையில்லை என்ற உணர்வு வரும். அந்த மனநிலை இருவருக்கும் வந்துவிட்டால் பிரிவதே சரியான முடிவு. இல்லையெனில் இருவருக்கும் நிம்மதி இருக்காது என்றும் அவர் விளக்கமாக கூறியுள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து ஆகும் நிலை மிகவும் பயமளிக்கும் விஷயம். அது யாருடைய வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது என்பதே தனது எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் வாழ்க்கை குறித்து தற்போது மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
பிக் பாஸ் பிறகு சினிமா பயணம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஹர்பஜன் சிங் நடித்த ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் கதையை அடிப்படையாக கொண்டு தமிழில் உருவான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்தார். இதில் பிக் பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா, விளம்பரங்கள், புகைப்பட ஷூட்கள் என தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
பழைய பேட்டிகளில் சொன்ன வாழ்க்கை பார்வை
முன்னதாக அளித்த பேட்டிகளிலும், வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் தன்னை அதிகமாக மாற்றியதாக லாஸ்லியா கூறியிருந்தார். எந்த ஒரு உறவாக இருந்தாலும் அது நமக்கு அமைதியும் முன்னேற்றமும் தர வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் தரும் ஆதரவு
தற்போது வெளியாகியுள்ள இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரிவு, மனவேதனை, வாழ்க்கை முடிவுகள் குறித்து மிகவும் முதிர்ச்சியான பார்வையில் லாஸ்லியா பேசியிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காதலில் ஏற்பட்ட அனுபவம் தனது வாழ்க்கையை பலப்படுத்தியதாகவும், தற்போது தனது எதிர்காலம், தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மீது கவனம் செலுத்தி வருவதாகவும் லாஸ்லியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications