உயிரோடு சமாதியாக்கினால் எப்படி ஏற்பது..? வயநாடு பெருந்துயர் குறித்து கவிஞர் சினேகன் திடீர் பதிவு
சென்னை: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் கன மழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். 200-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து பாடல் ஆசிரியர் சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
இயற்கை மிகவும் அழகானது. ஆனால் அந்த அழகில் எப்போது ஆபத்து இருக்கிறது என்று யாராலும் யூகித்து சொல்ல முடியாத நிலை தான் இருக்கிறது. அழகை அழகாக பேணி பாதுகாக்க வேண்டும் அதில் ஒரு சிறு தவறுகள் செய்யும் போது கூட பல அப்பாவி மக்களின் உயிர்களும் போய்விடுகிறது. சில தினங்களாகவே செய்தி சேனல்களிலும், இணையத்திலும் பலரையும் கண்கலங்க வைக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வயநாட்டிலிருந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலச்சரிவில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியாத நிலையில் பல்வேறு தரப்பினரும் தம்மாலான உதவிகளை செய்து வருகிறார்கள். பல பிரபலங்களும் பெரிய முதலாளிகளும் கேரள முதல்வர் நிவாரண நிதி மூலம் நிவாரணத்திற்காக நிதியை வழங்கி வருகின்றனர்.
அதுபோல தமிழ்நாட்டில் இருந்தும் பல சமூக ஆர்வலர்கள் வயநாட்டில் குவிந்து தங்களால் முடிந்த அளவிற்கு அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். சாப்பாடு தூக்கத்தை மறந்து கூட பலர் தேடுதல் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதில் நடிகராகவும், பாடல் ஆசிரியராகவும் இருந்து வரும் சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் "ஜீவசமாதி என்பது விரும்பி ஏற்பது.. ஜீவன்களை எல்லாம் உயிரோடு சமாதி ஆக்கினால் எப்படி ஏற்பது..
வயநாடு பெருந்துயரில் நிலை குலைந்து நிற்கிறது மானுடம்.. தடுமாறிய இயற்கையால் தடம் மாறிய வாழ்க்கையை மீட்டு எடுப்போம்" என்று சினேகன் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications