ஜாதி கட்சி தலைவர்களின் சுயநலம்.. உண்மை புரிந்தது இப்படித்தான்! இப்போ தவெக கட்சி செயலாளர்.. நீயா நானா தினகரன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஜாதி பெருமை பற்றி பேசிய தினகரன் கடந்த வாரத்தில் பிறப்பால் அனைவரும் சமம் என்று பேசி அனைவரையும் வியக்க வைத்திருந்தார். ஜாதி கட்சி தலைவர்கள் தங்களுடைய சுய லாபத்துக்காகவும், பெருமைக்காகவும் இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள், அதை நான் இப்போது புரிந்து கொண்டேன் என்று தினகரன் கூறியிருக்கிறார். அதோடு தான் இப்போது தவெக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிகழ்ச்சி மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடத்தப்படுவதால் ஒரு சில தலைப்புகள் மற்றும் விவாதங்கள் பலரையும் சிந்திக்க வைக்கிறது. அது போல தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜாதி பெருமை பேசுபவர்கள் ஒருபுறமும் அதை தவறு என்று பேசுபவர்கள் மற்றொரு புறமும் இருந்து விவாதித்தார்கள்.

நீயா நானா நிகழ்ச்சி
அப்போது தினகரன் என்ற ஒரு இளைஞர் தாங்கள் ஆண்ட பரம்பரை என்னுடைய ஜாதியை பற்றி பேசும்போது எனக்கு மீசையை முறுக்க தோன்றும், திமிராக நடக்க தோன்றும், என்னுடைய கண்களில் ஒரு கர்வம் வரும். கம்பீரமாக நான் என்னை உணருவேன். மன்னர்கள் போல நாங்கள் நடக்கிறோம் என்றெல்லாம் பேசி இருந்தார். அப்போது எதிர் தரப்பில் இருந்த பெண் தங்கம், நீ பேசுவது தப்பு, உன்னை ஜாதி கட்சி தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். இளைஞர்களிடம் ஜாதி பெருமையை பேசி தவறாக பயன்படுத்திகிறார்கள் என்று பேசி இருந்தார். அந்த எபிசோடு பெரிய அளவில் வைரல் ஆனது.
பிறப்பால் அனைவரும் சமம்
அதற்கு பிறகு அந்த இளைஞரை பலரும் ட்ரோல் செய்திருந்தனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ட்ரோல் ஆனவர்கள் ஒருபுறமும், அவர்களை ட்ரோல் செய்தவர்கள் மறுபுறமும் இருந்து கடந்த வாரத்தில் விவாதித்து இருந்தார்கள். அப்போது அதே தினகரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்ததாகவும் அதனால் தான் ஆரம்பத்தில் பேசியது தவறு என்று புரிந்து கொண்டேன் என்று சொல்லி இருந்தார்.
ஆண்ட பரம்பரை
நாங்க ஆண்ட பரம்பரை கம்பீரமாகத்தான் இருப்போம் என்று பேசிய தினகரன் இப்போது பிறப்பால் அனைவரும் சமம் என்று பேசி இருந்தார். இதனால் அவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது நான் ஆரம்பத்தில் ஜாதி பெருமை பேசிக்கொண்டு இருந்தது இப்போ நினைத்தால் எனக்கு அசிங்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அந்த மனநிலையில் இருந்து நான் மாறியதற்கு காரணம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் தான்.
அவமானம்
நாம தான் ஜாதி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம் நம்முடைய ஜாதி தலைவர்கள் அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை, அவர்கள் பெரிதாக எதுவும் செய்வதில்லை. என்னுடைய அண்ணன் கல்யாணத்தில் நாங்கள் ஜாதி தலைவர்களுக்காக 30 ஆயிரம் ரூபாய்க்கு கட் அவுட் அடித்திருந்தோம் அப்போது சில தலைவர்கள் நீ என்ன பெருசா செஞ்சுட்டேன்னு கேட்டாங்க. அது மட்டும் அல்லாமல் நான் ஜாதி முக்கியத்துவம் பற்றி பேசி பல இடங்களில் அவமானப்பட்டேன்.
தினகரனின் மனமாற்றம்
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட என்னை விட்டு பிரிந்து போக தொடங்கி விட்டார்கள். அதற்கு பிறகு தான் நம்முடைய சிந்தனை தவறு என்று எனக்கே புரிந்தது. இப்போ நான் இயல்பாக இருக்கிறேன். அதே நேரத்தில் நான் இப்போது ஜாதி கட்சியில் இல்லை. நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியில கிளைச் செயலாளராக இருக்கிறேன். இதற்கு காரணம் விஜய் பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்வது மட்டும் காரணம் அல்ல. என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் தான் என்று தினகரன் பேசியிருக்கிறார். தினகரனுடைய மனமாற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் நண்பர்களே?












Click it and Unblock the Notifications