நீயா நானாவில் கோபப்பட்ட கோபிநாத்.. ஜாதி பாகுபாடு பற்றி நறுக்குன்னு கேட்ட கேள்வி! எப்போது மாறும் இந்த நிலைமை?
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் சுவாரசியமான பல நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோடில் கிராமப்புறத்தில் இருக்கும் இளம் பெண்கள் நகரப்புற ஆண்களை திருமணம் செய்ய விரும்புபவர்களும், கிராமப்புற இளைஞர்களை பெற்றெடுத்த தாய்மார்களும் கலந்து கொண்டனர். அப்போது சமூகத்தில் நிலவும் சாதி பாகுபாடுகள் குறித்து கோபிநாத் கடுமையாக பேசி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பு ஏற்படுத்தும் தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த வாரத்தில் விவாதம் நடந்தது ஒரு தலைப்பு, ஆனால் சோசியல் மீடியா பக்கங்களில் மக்களை பேச வைத்திருப்பது இன்னொரு தலைப்பு, அதாவது கடந்த வாரத்தில் கிராமப்புறத்தில் இருக்கும் இளம் பெண்கள் நகரபுறத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள், எதிர்த்தரப்பில் கிராமப்புற இளைஞர்களை பெற்றெடுத்த தாய்மார்கள் கலந்து கொண்டு நீங்கள் நினைப்பது தவறு, நகரப்புறத்து ஆண்களை தான் திருமணம் செய்வேன் என்றால் கிராமப்புறத்து ஆண்களின் நிலைமை என்ன என்று தங்களுடைய குமுறல்களை கொட்டுகிறார்கள்.

இந்த வார எபிசோடு
இவர்கள் இருவருக்கும் இடையில் முதலில் விவாதம் இயல்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் தரப்பில் இருந்த ஒரு பெண் கிராமப்புற காலத்தில் இன்னமும் சாதி பாகுபாடுகள் இருக்கிறது சார் என்று பேசி இருந்தார். அப்போது எதிர் தரப்பில் அமர்ந்திருந்த அம்மாக்கள் அணியில் இருந்த ஒரு பெண் இப்போ கூட சொல்றேன் சார் இந்த பொண்ணு சரின்னு சொல்லுச்சுன்னா என் பையனுக்கு நான் இங்கேயே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இருந்தார்.
நீயா நானா வாக்குவாதம்
இதனால் கோபிநாத் அந்த இளம்பெண்ணிடம் இப்போ உங்களுடைய முடிவு என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு அந்த இளம்பெண் இந்த இடத்தில் நான் ஒரு உண்மையை சொல்லி ஆகணும், சிலர் பேச்சு வாக்குக்கு வேணா இப்படி எல்லாம் சொல்லலாம் ஆனால் எங்களுடைய ஜாதி என்ன என்று தெரியும்போது பலருடைய பேச்சு மாறிவிடும். பொதுவாக பிசி வகுப்பினரும் எம்பிசி வகுப்பினரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இளம் பெண் எமோஷனல்
அதே இடத்தில் எம்பிசி ஜாதியை சேர்ந்த ஒரு பையனுக்கு எஸ் சி பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க. நான் எஸ் சி (பட்டியலினம்) வகுப்பை சார்ந்த பெண் இதனால் பல இடங்களில் நாங்கள் அவமானங்களை சந்தித்து இருக்கிறோம் என்று சொன்னதும் கோபிநாத் எதிர் தரப்பில் இருந்த பெண்ணிடம் நீங்கள் இப்ப கூட அந்த பெண்ணை உங்க மருமகளாக்கிக்க சம்மதிக்கிறீர்களா என்று கேட்க அதற்கு அந்தப் பெண் அதிர்ச்சியோடு சரி என்று கூறியிருந்தார்.
பெண் கொடுத்த வாக்கு
ஆனால் முன்பு இருந்த வேகம், பின்பு பேசும்போது இல்லை என்பதால் கோபிநாத் அது குறித்து கேட்டிருந்தார். அதற்கு நான் மட்டும் இதில் முடிவெடுக்க முடியாது சார் என்னுடைய குடும்பத்திடமும் நான் ஆலோசித்துதானே பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு கோபிநாத் இதற்கு முன்பு பேசும்போது மட்டும் நீங்கள் குடும்பத்திடம் பேசாமல் தானே என்னுடைய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தைரியமாக சொன்னீங்க ஆனா இப்போ அந்த பெண்ணின் ஜாதி தெரிந்ததும் உங்களுக்கு எது தடுக்கிறது,மனசு மாறிவிட்டதே என்று கேட்டிருந்தார்.
பட்டியலின பெண்ணின் ஆதங்கம்
அதற்கு அந்தப் பெண் என்னால் வெளியே சொல்ல முடியவில்லை, ஆனால் மனசு கஷ்டமாக இருக்கிறது. நான் வாக்கு கொடுத்துவிட்டு இப்போது முடியாது என்று சொல்வது ஏமாற்றியது போல இருக்கிறது ஆனால் என்னால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியாது என்று எமோஷனல் ஆகி பேசி இருந்தார். அதற்கு கோபிநாத் அந்த இளம் பெண் அவருடைய வலியை தான் உங்களிடம் சொன்னார் என்று கூறியிருந்தார்.
ஜாதி பாகுபாடு
அதேபோல எதிர் தரப்பில் இருந்த இளம் பெண்களிடம் நீங்கள் ஒரு பட்டியலின ஆணை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்க, அங்கு இருந்த எந்த பெண்ணுமே அதற்கு சரி என்று சொல்லவில்லை. இதனால் கடுப்பான கோபிநாத் இந்த மனநிலை தான் பலருடைய மனதில் இருக்கிறது. எதிர் தரப்பில் இருந்தவர்களாவது நான் மட்டும் இதில் எந்த முடிவு எடுக்க முடியாது, நான் முதலில் ஒரு வாக்கு கொடுத்து விட்டேன் பிறகு அதை செய்ய முடியவில்லை என்ற ஒரு வருத்தம் தெரிந்தது. ஆனால் இங்கிருக்கும் பெண்கள் யாருக்குமே அந்த வருத்தம் தெரியவில்லையே?
கோபிநாத் கேட்ட கேள்வி
இவ்வளவு நேரம் நாங்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த இளம் பெண்கள் கூட இப்போ பட்டிலின ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றதும் பேச்சை நிறுத்திவிட்டீர்கள். இப்ப மட்டும் குடும்பத்தினரின் சம்மதம் வேண்டும் என்று சொல்கிறீர்கள்? என்று கோபிநாத் கேள்வி கேட்க எதிர் தரப்பில் இருந்த இளம் பெண்களால் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் கோபிநாத் கேட்டது சரி என்று சிலர் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications