கணவர் காசில் இதை செய்ய முடியுமா? கோபிநாத் கேட்ட கேள்வி.. குவியும் கண்ணீர் கமெண்டுகள்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கணவர் பணம் என்னுடைய பணம் என்றும் பெண்களுக்கு தனியாக பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பிலும் விவாதம் நடக்கிறது.
அதில் கணவர் சம்பாதிக்கும் பணத்தில் பாதி உரிமை மனைவிக்கும் இருக்கிறது என்று ஒரு பெண் கூறுகிறார்.

அதற்கு கோபிநாத் கணவர் பணத்தை வைத்து பெண்ணுடைய அம்மா வீட்டிற்கு செலவு செய்ய முடியுமா? என்று கேட்க அரங்கமே அமைதியாக மாறுகிறது.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளின் அடிப்படையில் விவாதம் வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் கணவர் சம்பாதித்த பணம் என்னுடைய பணம் என்று ஒரு தரப்பினரும் அதில் பெண்களுக்கு என்று தனியாக பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்றும் இன்னொரு தரப்பினரும் கலந்து கொண்டு விவாதம் செய்கின்றனர்.

அதில் பல பெண்கள் தங்களுடைய கணவருடைய பணத்தில் தங்களுக்கு உரிமையை இல்லை என்று தங்களுடைய நிலைமையை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண்கள் அது எப்படி சொல்ல முடியும் கணவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 50 பைசாவுக்கு மனைவியுடைய உழைப்பும் கஷ்டமும் இருக்கிறது.
அதனால் கணவருடைய பணத்தில் மனைவிக்கும் பாதி பங்கு இருக்கிறது என்று சொல்ல, அதற்கு இன்னொரு தரப்பில் இருந்த பெண் ஒருவர் என் கணவருடைய உழைப்பை என்னுடைய உழைப்பு என்று நான் சொல்ல முடியாது. அப்போ எப்படி என்னுடைய பணம் என்னுடையது என்று நான் சொல்ல முடியும் என்று கேட்கிறார்.

அதுபோல இன்னொரு பெண் கணவருடைய சம்பாத்தியத்தில் 50 சதவீதம் பங்கு இருக்குன்னு அவங்க சொல்றாங்க. அந்த பணத்துல என் குடும்பத்துக்கு நான் செலவழிக்க முடியுமா? என்று கேட்க அதற்கு கோபிநாத் அம்மா கேட்டாங்கன்னு ஒரு பத்தாயிரத்தை எடுத்து கொடுக்க முடியுமா? என் தம்பிக்கு ஒரு லட்ச ரூபா தொழில் தொடங்க கொடுக்கணும்னு என்னால எடுத்து கொடுக்க முடியுமான்னு கேக்குறாங்க என்று சொல்ல, எதிர் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் பெண்கள் அமைதியாக இருக்கின்றனர்.
இப்படியாக இந்த வார முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் கடந்த சில வாரங்களுக்கு பிறகு கருத்துக்களை குவிக்கிறார்கள். அதில் "இந்த ப்ரோமோ பார்க்கும்போது எனக்கு அழுகையே வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய கணவர் சொன்னார் ஐந்து பைசா சம்பாதிக்க வக்கில்லை உனக்கு என்று அதுதான் இந்த ப்ரோமோவிலும் தெரிகிறது" என்று ஒரு பெண் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

இதுபோல இன்னொரு கமெண்டில், "என்னை எப்போதெல்லாம் என் வீட்டார் குறைவாக மதிப்பிடுகிறார்களோ, அப்போதெல்லாம் நாம சம்பாதிக்கல இதெல்லாம் நம்மளது இல்ல என்று தோணும்" என்று கூறி இருக்கிறார். அதுபோல இன்னொரு கமெண்டில் "இது நல்ல கேள்வி. நான் அவஸ்தப்பட்டு இருக்கிறேன். நிறைய திருமணம் ஆன பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களின் தாய் வீட்டு விசேஷங்களுக்கு வீட்டு செலவுக்காக தான்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications