Pongal Box Office: பொங்கல் ரேஸில் பராசக்தியை கதறவிட்ட, தலைவர் தம்பி தலைமையில்.. வசூல் நிலவரம் பாருங்க
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொங்கல் பாக்ஸ் ஆஃபிஸ் களம், ஆரம்பத்திலேயே பெரும் எதிர்பார்ப்புகளும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக மாறியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராத வகையில் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் சிக்கலால் ரிலீஸில் இருந்து விலகிக் கொண்டதால், பத்தாம் தேதி 'பராசக்தி' மட்டும் தனியாக சோலோ ரிலீஸாக திரையரங்குகளில் களம் இறங்கியது.

இந்த சூழ்நிலையில், பராசக்திக்கு போட்டியே இருக்காது, பொங்கல் பாக்ஸ் ஆஃபிஸை அது தனியாக ஆளும் என பலரும் கணித்தனர். ஆனால் அந்த கணிப்பை சற்று சவாலுக்கு உட்படுத்தும் விதமாக, ஜனவரி 14ஆம் தேதி கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் உருவான 'வா வாத்தியார்' மற்றும் 15ஆம் தேதி ஜீவா - நிதிஷ் சகாதேவ் இணைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸாகின. இதனால் இந்த ஆண்டு தொடக்க பாக்ஸ் ஆஃபிஸ் போட்டி, மூன்று படங்களுக்கு இடையிலான சுவாரஸ்யமான மோதலாக மாறியது.
பராசக்தி - எதிர்பார்ப்பு vs நிஜம்
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி, ஹிந்தி திணிப்புக்கு எதிரான 60களின் மாணவர் போராட்டத்தை மையமாக வைத்து உருவானதால், தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜனநாயகன் விலகிய பிறகும், வந்த சிக்கல்களை எல்லாம் சமாளித்து அறிவித்த தேதியிலேயே படம் ரிலீஸானது. ஆனால் படம் வெளியான பின் விமர்சனங்கள் கலவையாக வந்தன. கருத்து ரீதியாக வலுவான கதையாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தலில் முழுமையான திருப்தி இல்லை என்ற கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
வா வாத்தியார் - சுமாரான வரவேற்பு
கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார், ஃபேண்டஸி - சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஜானரும், நலனின் வழக்கமான ஸ்டைலும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என ரசிகர்கள் நொந்துகொண்டனர். கார்த்தியின் நடிப்பு ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்தாலும், கதையின் போக்கு மற்றும் மேக்கிங் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை என்பதே பொதுவான கருத்தாக உருவானது.
தலைவர் தம்பி தலைமையில் - சர்ப்ரைஸ் ஹிட்
இதற்கு மாறாக, ஜீவா - நிதிஷ் சகாதேவ் கூட்டணியில் உருவான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. மலையாள பாணியில் உருவான ஒரு ஃபீல் குட் காமெடி டிராமாவாக இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள், இயல்பான நடிப்பு, எளிமையான திரைக்கதை ஆகியவை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. முதல் படத்திலேயே நிதிஷ் சகாதேவ் தனது இயக்குநர் திறனை நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
வசூல் நிலவரம்
Sacnilk இணையதளத்தின் தகவல்படி, பத்தாம் தேதி வெளியான பராசக்தி இதுவரை இந்தியாவில் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வா வாத்தியார் மூன்று நாட்களில் 5.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தலைவர் தம்பி தலைமையில் படம் முதல் நாளில் 1.4 கோடி, இரண்டாவது நாளில் 2.5 கோடி என இரண்டு நாட்களில் மொத்தமாக 3.9 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஜீவா படத்தின் எழுச்சி
நாளுக்கு நாள் தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு கிடைக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள், அதன் வசூலிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளன. பராசக்தி மற்றும் வா வாத்தியார் படங்களில் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், தற்போது ஜீவாவின் படத்தை நோக்கி திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். இதன் விளைவாக, வா வாத்தியார் வசூலை விரைவில் தலைவர் தம்பி தலைமையில் முந்தும் என்றே கணிக்கப்படுகிறது.
பராசக்தியின் மொத்த வசூலை முந்துவது கடினமான இலக்காக இருந்தாலும், அதன் வசூல் வேகம் தற்போது சற்று தளர்ந்து வருவது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில், 2026 பொங்கல் பாக்ஸ் ஆஃபிஸ் போட்டி, ஆரம்பத்தில் ஒருதலைப்பட்சமாக இருக்கும் என நினைக்கப்பட்டாலும், தற்போது ஜீவா - தலைவர் தம்பி தலைமையில் படத்தின் எழுச்சியால் முழுமையாக சுவாரஸ்யமான திருப்பத்தை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications