பிக் பாஸ் 8ன் முதல் நாளில் ரஞ்சித்துக்காக கலந்து கொள்ளாதது இதனால்தான்.. பிரியா ராமன் விளக்கம்
சென்னை: நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகும் போது அவருடைய மனைவி பிரியா ராமன் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வந்த நிலையில், தான் எதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று நடிகை பிரியா ராமன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சினிமா துறையில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு சிலர் மட்டும்தான் பல வருடங்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை கொண்டு போகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் ஜோடியும் ஒருவர்.

ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் பலருக்கும் தெரிந்தவர்கள் தான். ரஞ்சித் சிந்துநதி பூவே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதுபோல நேசம் புதிது என்ற திரைப்படத்தில் பிரியா ராமனுடன் நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து செய்தனர். அதற்குப் பிறகு நடிகை ராதாசுதாவை ரஞ்சித் திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் ரஞ்சித்திற்கு சரியாக அமையாமல் விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு சில மாதங்களிலேயே நடிகை பிரியா ராமனோடு மீண்டும் சேர்ந்து விட்டார்.
இவர்கள் இருவரும் தங்களுடைய உண்மையான காதலை புரிந்து கொண்டதாகவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளும் வெளியிட்டிருந்தனர். பிரியா ராமன் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் செம்பருத்தி உட்பட சில சீரியல்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரஞ்சித் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரியா ராமன் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதா? இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று பல்வேறு செய்திகள் வலம் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து பிரியா ராமன் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் கலந்து கொள்வது கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குள் நாங்கள் எடுத்த முடிவுதான் இது. எங்களுக்கு நெருக்கமான ஒரு இளம் ஜோடிகளுக்கு எங்களால் நல்லது நடக்க வேண்டும் என்று இருந்தது. அந்த இடத்தில் எங்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. எங்களை நம்பி இளம் ஜோடி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு யாரும் இல்லை.
அவர்களுக்கு ஒரு நல்லது நடக்கும் போது அந்த இடத்தில் நாங்கள் இருவரும் இருக்க வேண்டும் என்று அவர்களும் ரொம்ப ஆசைப்பட்டார்கள். நாங்களும் வாக்கு கொடுத்து விட்டோம். ஆனால் அதே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். அவருக்கு பதிலாக நான் அந்த இடத்தில் அந்த ஜோடிகளுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து முடித்தோம்.

ரஞ்சித் ரொம்பவும் இளகிய மனதுக்காரர் அவர் வெளியிலே எப்படி இருக்கிறாரோ அதேபோலத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். அவர் எந்த இடத்திலும் அந்த வீட்டிற்குள் நடித்துக் கொண்டு இல்லை. அவரால் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் இன்னும் ஒரு சில வருடங்கள் கழித்து கூட வெளியே ரஞ்சித்திடம் பேசும்போது அவருடைய நடவடிக்கை கொஞ்சம் கூட மாறாது அப்போது அவர்கள் இவர் உண்மையாக இருக்கிறார் என்று புரிந்து கொள்வார்கள் என அந்த பேட்டியில் பிரியா ராமன் தன்னுடைய கணவர் ரஞ்சித்துக்காக சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications