வெளியே தலை காட்ட முடியல! மருமகள் பணம் சம்பாதிக்கிறாள்! ராகுல் டிக்கி அம்மா புகார்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: சோசியல் மீடியாவில் குறுகிய காலத்தில் தன் தனித்துவமான நகைச்சுவை மூலம் பிரபலமான யூடியூப் கலைஞர் ராகுல் டிக்கி, கடந்த ஜனவரி மாதம் ரோடு ஆக்ஸிடென்டில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்திய நிலையில், இப்போது ராகுலின் மனைவி தேவிகா ஸ்ரீ மற்றும் அவரது அம்மாவுக்கு இடையே எழுந்துள்ள மோதல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல் டிக்கி
திரைப்பட வாய்ப்பு தேடியும் கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானவர் ராகுல் டிக்கி. திரைப்படங்களில் பிரபலமான காட்சிகள் மற்றும் வைரலாகும் வசனங்களை அவருக்கே உரிய பாணியில் காமெடியாக நடித்து வீடியோ வெளியிட்டுப் பிரபலமானார். இவருடைய திறமையால் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்திருந்தன. 2025ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, ஈரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்தார்.
தாயின் கண்ணீர் புகார்
ராகுலின் மறைவுக்குப் பிறகு, அவருடைய தாய்க்கும், மனைவி தேவிகா ஸ்ரீக்கும் இடையே பல பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், ராகுலின் அம்மா, கமிஷனர் அலுவலகத்தில் மருமகள் தேவிகா ஸ்ரீ மீது பரபரப்புப் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். "என் மருமகள் தேவிகா ஸ்ரீ, என்னுடைய மகனின் இன்ஸ்டா ஐடியை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்," என்று குற்றம் சாட்டிய ராகுலின் தாய், "தன்னுடைய மகன் நினைவாக ஒரு பொருளுமே தன்னிடம் இல்லாத நிலையில், தேவிகா ஸ்ரீ வைத்திருக்கும் ராகுலின் நகைகள், ட்ரோஃபி போன்ற அனைத்துப் பொருட்களையும் மீட்டு கொடுக்கும்படி" கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடுமைக்கார மாமியார் பட்டம்
கண்ணீருடன் தொடர்ந்து பேசிய அவர், "என் மகன் இறந்ததற்கு, அந்தப் பெண்ணும் (தேவிகா ஸ்ரீ) அவரின் அம்மாவும் தான் காரணம். அந்தப் பொண்ணு ஏற்கனவே ஒரு பையனுடன் தொடர்பில் இருந்துள்ளார். என்னைக் கொடுமைக்கார மாமியார் என்று பொய்யாகப் பட்டம் கட்டி, என் மகன் இறந்த பின்னர் அபாண்டமாகப் பேசுகிறாள். தினமும் ரூ.500 கொடுத்து நான் அவனை குடிக்கச் சொன்னதாகச் சொல்கிறாள்," என்று கதறினார். "என் மகனின் ஐடியில் அசிங்கசிங்கமாக வருகிறது. ஒருவேளை அவனுடைய இன்ஸ்டாகிராம் ஐடியைக் கொடுக்கவில்லை என்றால், அதை குளோஸ் பண்ண வேண்டும். நாங்கள் வயதான காலத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். மருமகள் எங்கு வேண்டுமானாலும் போ, என்னவேனாலும் செய் என்று பேசுகிறாள்" என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மருமகளுக்கு ஆதரவான இணையத்தின் குரல்
ஒருபக்கம் ராகுலின் தாய் அனுதாபத்தைத் தேடிய போதும், இணையவாசிகள் பலர் தேவிகா ஸ்ரீக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். "ராகுல் டிக்கியின் அம்மா, தன்னுடைய மருமகள் மீது இப்படிப் பொறாமைப்படக்கூடாது," என்றும், "அந்தப் பெண்ணுக்குப் புருஷனும் இல்லை, வருமானமும் இல்லை. இந்த வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும். அதையும் இந்த அம்மா கெடுக்கப் பார்க்கிறார்" என்றும் பலர் கமெண்ட் கொடுத்து, ராகுலின் தாய்க்கு எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தேவிகா ஸ்ரீயின் நிலை
கணவரை இழந்த தேவிகா ஸ்ரீ, ராகுலின் இன்ஸ்டா ஐடியைப் பயன்படுத்தி காமெடியாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்துக் கூடிய விரைவில் தேவிகா ஸ்ரீயிடம் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மகனை இழந்த துயரிலும், சொத்து மற்றும் இன்ஸ்டா ஐடி மீதான சண்டையில் சிக்கியிருக்கும் இந்தத் தாய்-மருமகள் விவகாரம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications