வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால், குழந்தைகள் பாதிப்பு.. அதனால், ரவி மோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) இன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் பிரீத்தா திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய தோழியான கெனிஷா பிரான்சிஸ் உடன் ஜோடியாக கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் ரவிமோகனின் மனைவி ஆர்த்தி இது பற்றிய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கடந்த வருடத்தில் ரவிமோகன் தான் ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார். அதோடு நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கு தொடுத்து வந்திருக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், ஒரு வருடமாக நான் போல மௌனத்தை சுமந்து வருகிறேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல. ஆனால் என் மகன்களுக்கு இந்த நேரத்தில் பிரச்சினை செய்வதை விட அமைதி தேவைப்பட்டதால் அமைதியாக இருந்தேன்.

கிசுகிசுப்பு
என்னை பற்றி வந்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும், ஒவ்வொரு கொடூரமான கிசுகிசுப்பையும் நான் உள்வாங்கிக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. அதற்குக் காரணம் என்னிடம் உண்மை இல்லாததால் அல்ல. என் குழந்தைக் பெற்றோருக்குள் இருக்கும் பிரச்சனையை சுமக்க விரும்பவில்லை என்பதால் தான் நான் அமைதியாக இருந்தேன்.
ரவி மோகன் மனைவி பதிவு
இன்று வெளியான புகைப்படங்களையும் அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது எதார்த்தம் வேறு மாதிரியாக தெரிந்தது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், 18 ஆண்டுகளாக அன்பிலும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் ஒரு காலத்தில் கௌரவிப்பதாக உறுதி அளித்த பொறுப்புகளில் இருந்து இப்போது விலகி சென்றுள்ளார்.
ஆர்த்தியின் குற்றச்சாட்டு
பல மாதங்களாக குழந்தைகள் சுமை என் தோள்களில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு இரவிலும் அமைதியான கண்ணீரை நான் சுமந்தேன். ஒரு காலத்தில் குழந்தைகளை தனது பெருமை என்று சொன்னவரிடம் இருந்து நிதி ஆதரவின் ஒரு சிறிய அளவு கூட கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் என்னுடன் அந்த வீட்டை கட்டியவரின் அறிவுறுத்தலின் பெயரில் இப்போது நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதை எதிர் கொள்கிறோம்.
குற்றசாட்டுகளுக்கு பதில்
நான் சுயநலவாதி என்று குற்றம் சாட்டப்படுகிறேன் அது எப்போதாவது உண்மையாக இருந்திருந்தால் நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களை பாதுகாத்து இருப்பேன். ஆனால் நான் அன்பை மட்டும் தான் தேர்ந்தெடுத்தேன். பரிவர்த்தனையை விட நம்பிக்கையை தேர்ந்தெடுத்தேன் அதுதான் என்னை இப்போது இங்கு கொண்டு வந்துள்ளது. அந்த அன்பு பலவீனமாக மாற்றப்பட்டால் நான் உடன்பட மாட்டேன்.
பதிவுக்கு காரணம்
என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதுடையவர்கள் அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு தேவை. அமைதியான நிலைத்தன்மை தேவை. சட்டப்பிரிவுகளை அவர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இளையவர்களாக இருக்கிறார்கள். பதில் அளிக்கப்படாத ஒவ்வொரு அழைப்பும், ரத்து செய்யப்பட்ட ஒவ்வொரு சந்திப்பும், எனக்காக எழுதப்பட்டன. நான் இன்று ஒரு மனைவியாக பேசவில்லை, தன் குழந்தைகளின் நலனை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு தாயாக பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் நான் என்றென்றுமே தோல்வி அடைவேன்.
குழந்தைகளுக்காக பதிவு
18 வருடங்களாக காதல் உண்மை மற்றும் நேர்மையுடன் என் பக்கம் நின்ற என் கணவர் என்னை பிரிந்தாலும் என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா. ஒரு மனைவியாக இதை நான் பதிவிடவில்லை எனக்கு எந்த ஒரு பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. ஆனால் என்னுடைய 10 வயது மற்றும் 14 வயது மகன்களுக்கு டைவர்ஸ் பிரச்சனைகள் என்றாலே என்னவென்று தெரியாத நிலையில் எங்கள் மூவரின் தனிமையில் தவிக்க விட்டு விட்டு இன்று வேறொரு பெண்ணுடன் நீங்கள் பட்டு உடையில் வேறொரு பெயருடன் புதிய நபராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் என்றைக்குமே உங்களை அப்பா என அழைக்கும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் நீங்கள் அப்பா தான் என பதிவிட்டு இருக்கிறார்.
இப்போதும் ரவி மோகன் மனைவிதான்
அதுபோல மதிப்பிற்குரிய ஊடகங்களுக்கு நானும் சட்டமும் முடிவெடுக்கும் வரைக்கும் என்னை முன்னால் மனைவி என்று அழைப்பதை தவிர்க்கவும் என அந்த பதிவில் ஆர்த்தி கூறி இருக்கிறார். ஆர்த்தி வெளியிட்ட பதிவை நடிகை குஷ்பு உட்பட பல சினிமா நடிகைகள் அரசியல் பிரபலங்கள் பலரும் லைக் செய்து இருக்கிறார்கள். அதோடு ஆர்த்திக்கு ஆதரவாக அவருக்கு தைரியம் கொடுத்திருக்கிறார்கள்.
ரவி மோகன் கெனிஷா புகைப்படம்
ரவிமோகன், கெனிஷா பிரான்சிஸ்சை விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு பரவி வந்தது. அதற்கு கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவருமே மறுப்பு தெரிவித்து பேசி இருந்தனர். ஆனால் இன்று இருவரும் ஒரே வண்ண உடையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு கலந்துகொண்டது தான் இணையத்தில் காலையில் இருந்து அதிகமாக பேசப்பட்டது. கூட்டத்தில் கனிஷாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக ஜெயம் ரவி கூட்டி கொண்டு வந்ததை பார்த்து ஆர்த்தி கோபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இதற்கு ஜெயம் ரவி தரப்பில் இருந்து என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications