விஜய், திரிஷா சர்ச்சை.. ட்ரோலாகும் கெனிஷா.. ரவி மோகன் இப்படி பேசிட்டாரே! உருக்கமான பதிவு
சென்னை: சமீப காலமாக நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது திருமண வாழ்க்கை, மனைவி ஆர்த்தி ரவி உடன் ஏற்பட்ட பிரிவு, மேலும் பாடகி கெனிஷா உடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற விஷயங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து விவாதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

திருமண வாழ்க்கை பிரச்சனை
ரவி மோகனும், அவரது காதல் மனைவி ஆர்த்தியும் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிரிவுக்குப் பிறகு ரவி மோகன் தனது மனநல ஆலோசகராக இருந்த பாடகி கெனிஷா பிரான்சிஸை "கம்பானியன்" என்று குறிப்பிட ஆரம்பித்தார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளிலும் அவர் கெனிஷாவுடன் சேர்ந்து வர ஆரம்பித்தார். இதனால் சமூக வலைதளங்களில் இந்த விஷயம் அதிகமாக பேசப்பட்டது.

ஒரே நிற உடை சர்ச்சை
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு இருவரும் ஒரே போல மேட்சிங்காக கோல்டு கலரில் உடை அணிந்து வந்திருந்தனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
அதற்குப் பிறகு மற்றொரு தயாரிப்பாளர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே நிற உடை அணிந்து வந்தது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதை ஒப்பிட்டு சிலர் "இது என்ன புதிய டிரெண்ட்?" என்று கேள்வி எழுப்பி ரவி மோகன் மற்றும் விஜயை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இன்ஸ்டாகிராமில் ரவி மோகன் பதிவு
இந்த விமர்சனங்கள் மீண்டும் அதிகரித்த நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசவில்லை என்றாலும் அதற்கு கீழே எழுதியிருந்த வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "இதைக் குறித்து மீண்டும் எழுத வேண்டிய நிலை வந்துவிட்டது. பெண்கள்தான் எப்போதும் சரி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதால் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ சொல்லுங்கள்.
ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அது நீதித்துறைக்கும் புரிந்திருக்கிறது. ஒரு நாள் இல்லையெனில் ஒருநாள் நீங்கள் என்னுடைய மனசையும், நான் பாசம் வைத்திருப்பவர்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு மனிதனை வாழவிடுங்கள். உங்கள் மோசமான கருத்துக்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் என் வழிக்கே திரும்பிச் செல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவின் விளக்கத்தில், "நான் பேசாவிட்டாலும் எனக்கு பதில் சொல்ல இன்னொருவர் இருக்கலாம். ஆனால் என்னைப் போல இன்னொருவர் இல்லை என்பதும் எனக்கு தெரியும்" என்று எழுதியிருந்தார்.

ரசிகர்களின் எதிர்வினை
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், "மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அமைதியாக வாழ முடியாது. தயவு செய்து கெனிஷாவை விட்டு உங்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் மற்றொரு தரப்பு ரசிகர்கள், "ரவி மோகன் எவ்வளவு மன வேதனை அனுபவித்திருக்கிறார் என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு தெரியாது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அவர் விரும்பும் விதத்தில் வாழ அவருக்கும் உரிமை இருக்கிறது" என்று ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் ரவி மோகனின் இந்த பதிவு மீண்டும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் இன்னும் எப்படி மாறும் என்பது ரசிகர்களிடையே ஆர்வமாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications