Ravi Mohan : ரவி மோகனிடம் சிவகார்த்திகேயன் நேரடியாக கேட்ட கேள்வி! கண்கலங்கிய கெனிஷா! அடுத்த சம்பவம்!
சென்னை: நடிகர் ரவி மோகன், தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என இருபெரும் அவதாரங்களை எடுப்பதாக, தனது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விழாவில், கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகி பாபு உட்படப் பல பிரபலங்கள் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய மகிழ்ச்சியான மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரவி மோகனின் புது அவதாரம்
நடிகராகப் பல வெற்றிகளைக் குவித்த ரவி மோகன், தற்போது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம், கார்த்திக் யோகி இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் 'ப்ரோ கோட்' மற்றும் யோகி பாபுவை ஹீரோவாக வைத்துத் தானே இயக்கும் 'An Ordinary Man' ஆகிய இரண்டு படங்களின் பூஜைகள் விழாவில் நடைபெற்றன.
பராசக்தி படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் தற்போது ரவி மோகனுடன் 'பராசக்தி' திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரவி மோகன் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது, ரவி மோகன் சிவகார்த்திகேயனிடம் சில கதைகளைச் சொல்லியிருக்கிறார். அப்போதே, ரவி மோகன் இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவார் எனச் சிவகார்த்திகேயன் கணித்தாராம்.
சிவகார்த்திகேயனின் உணர்வுபூர்வமான பேச்சு
இந்த விழாவில் சிவகார்த்திகேயன் தனது ஸ்டைலில் கலகலப்பாகப் பேசி, ரவி மோகன், ஜெனிலியா மற்றும் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். மேடையில் ஜெனிலியா மற்றும் ரவி மோகனை ஒன்றாகப் பார்த்த சிவகார்த்திகேயன், "நான் கல்லூரி படிக்கும்போது, 'சந்தோஷ் சுப்ரமணியம்' திரைப்படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்துள்ளேன். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர்களை மீண்டும் ஒன்றாக மேடையில் பார்த்த பிறகு, எனக்கு ஒரு 'நாஸ்டால்ஜிக்' உணர்வு கிடைத்தது." என்றார்.
ஜெனிலியா - ரவி மோகன் ரீயூனியன்
உடனடியாக, "எனவே, மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும்" என்று மேடையிலேயே ரவி மோகன் மற்றும் ஜெனிலியாவிடம் கோரிக்கை விடுத்தார் சிவகார்த்திகேயன். இதை ஏற்று, இருவரும் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் சில வசனங்களை பேசி, ரசிகர்களைக் கவர்ந்தனர்.
வாழ்த்து
ரவி மோகனின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சிவகார்த்திகேயன், "தயாரிப்பு - இயக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நடிகராக நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்களோ, அதேபோல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வெற்றி பெறுவீர்கள்" என்று மனதார வாழ்த்தினார். பல கனவுகளைச் சுமந்துகொண்டு, ஒரு நடிகராகத் தொடங்கி, இன்று தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகனின் இந்த புதிய பயணம், நிச்சயம் வெற்றிபெறும் என ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளனர்.
கெனிஷா தான் என் சொத்து
மேடையில் பேசிய ரவி மோகன், தான் சந்தித்த சவால்கள் குறித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். "எனக்கும் சில நெகட்டிவிட்டி வந்தது. என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள்தான். காசு, பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பைச் சம்பாதிப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன்." என்று உருக்கமாகப் பேசினார்.
இந்த விழா நடப்பதற்கு முழு காரணம் கெனிஷா தான் என்று கூறிய ரவி மோகன், "ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர் அவர்தான். அவங்களை மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றார். ரவி மோகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கெனிஷாவும் கண்கலங்கிப் போனார்.












Click it and Unblock the Notifications