Robo Shankar: ரோபோ சங்கர் எனக்கு போன் பண்ணி அப்படி கேட்டாரே! இருட்டு இயற்கை! மிஸ்கின் வெளியிட்ட வீடியோ
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் ரோபோ சங்கர், கடந்த 18ஆம் தேதி இரவு 9 மணியளவில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது மரணச் செய்தி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலக்கப்போவது யாரு, புலி, மாரி, விஸ்வாசம் போன்ற பல நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்த ரோபோ சங்கரின் இழப்பு, பல கலைஞர்களையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின், ரோபோ சங்கர் குறித்த ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாளைக்கே சமைத்துக்கொண்டு வருகிறேன்
மிஷ்கின் தனது வீடியோவில், ரோபோ சங்கருடனான தனது கடைசி உரையாடலை நினைவு கூர்ந்தார். "பத்து நாட்களுக்கு முன்பு, தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அண்ணே நான் ரோபோ சங்கர் பேசுறேண்ணே. நீங்கள் கலந்து கொள்ளும் எல்லா டிவி நிகழ்ச்சிகளையும் பார்த்தேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றார்".
அதன் பிறகு, ரோபோ சங்கர் தனது மனைவியிடம் போனை கொடுத்திருக்கிறார். அப்போது ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா மிஷ்கினை அண்ணா என அழைக்க, "நீ என் தங்கை அம்மா" என்று மிஷ்கின் அன்புடன் பேசினார். "எப்போது எனக்குச் சமைத்துக் கொடுப்பாய்?" என்று மிஷ்கின் கேட்க, உடனே ரோபோ சங்கர், "அண்ணே உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்கண்ணே... நாளைக்கே சமைத்துக் கொண்டு வந்து தருகிறேன்" என அன்போடு சொன்னார். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது என மிஷ்கின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இயற்கை இருட்டானது
மிஷ்கின் மேலும், "இந்த இயற்கை இருட்டானது. மக்களை மகிழ்விக்கும் மகா கலைஞர்களை இருட்டு அழைத்துக் கொள்கிறது. முன்பு விவேக்... இப்போது ரோபோ சங்கர்..." என்று உருக்கமாகப் பேசியுள்ளார். தனது பிறந்தநாளைத் தனியாகக் கொண்டாட ஒரு இடத்திற்கு வந்த பிறகுதான், இந்த இடி போன்ற செய்தி தனக்குக் கிடைத்ததாக மிஷ்கின் கூறியுள்ளார். "இனி எப்படி அந்த தங்கை ரோபோ சங்கர் இல்லாமல் எனக்கு உணவு பரிமாறுவாள் என தெரியவில்லை. ரோபோ சங்கருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை காத்திருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மற்ற பிரபலங்களின் கண்ணீர் அஞ்சலி
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் அண்ணன் "ரோபோ சங்கர் தான் எங்க வீட்டு செல்ல பிள்ளை இனி அவனுடைய இடத்தை அவன் தான் மீண்டும் பிறந்து வந்து நிரப்பணும்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
பாடலாசிரியர் சினேகன், "அவர் உடல்நிலை குறித்துப் பல நண்பர்கள் கவலைப்பட்டோம். ஆனால், மனம் சொன்னதை மட்டுமே கேட்டு செயல்பட்டார்" என்று வருத்தத்துடன் கூறினார். நடிகர் இளவரசு, "மேடை நிகழ்ச்சிகளுக்காக உடம்பில் சில்வர் பெயிண்ட் அடித்து, அதை மண்ணெண்ணெய் வைத்துத் துடைத்ததே அவரது கல்லீரல் பாதிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்று ஒரு அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சிரிப்பை மட்டுமே கொடுத்த ரோபோ சங்கரின் மறைவு, பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. அவரது இழப்பு, ஒரு தனிப்பட்ட சோகம் என்பதைத் தாண்டி அவருடைய நடிப்பையும் மற்றும் கனீர் என்ற குறளையும் பலரும் மிஸ் பண்ணுவதாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications