"நான் செத்துட்டேன்னு வீட்டுக்கு மாலை கொண்டு வந்தாங்க!" நான் சொன்ன வார்த்தை இதுதான்! ரோபோ சங்கர் உருக்கம்
சென்னை: தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் உடல் மொழியால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவங்களைப் பகிர்ந்து, பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

மிமிக்ரியும், மேடைப் பேச்சும்
கலை உலகிற்குள் நுழைந்த ஆரம்ப நாட்களில், மேடைப் பேச்சுகள் மற்றும் மிமிக்ரி நிகழ்ச்சிகள் மூலம் ரோபோ சங்கர் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அது இது எது' நிகழ்ச்சி, அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதில் அவர் செய்த நகைச்சுவைகளும், பிரபலங்களை மிமிக்ரி செய்த விதமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
காமெடி நடிகர் அவதாரம் சின்னத்திரையில் கிடைத்த வெற்றியின் மூலம், வெள்ளித்திரையில் 'மாரி', 'நானும் ரௌடிதான்', 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து, தனது அசாத்தியமான நடிப்பால் தனி முத்திரையைப் பதித்தார்.
மகள், பேரன், மற்றும் குடும்பம்
ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஆனால், தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜா திருமணம் செய்து கொண்டு, தற்போது ஒரு குழந்தைக்குத் தாயாகி, இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பேரனின் மீதான பாசம்:
சமீபத்தில் பேசிய ரோபோ சங்கர், தனது பேரனைப் பற்றி நெகிழ்ந்து பேசியிருந்தார். "நான் என் மகள் இந்திரஜா வளர்ந்ததைக்கூட அருகில் இருந்து பார்க்க முடியவில்லை. ஆனால், எனது பேரனை கையில் வாங்கியபோது அந்த உணர்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவன் பேசத் தொடங்கும்போது, கமல்ஹாசன் அல்லது மாதவன் போல வசனம் பேசி வீடியோ எடுத்து வைப்பேன்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
மகளை நான் தடுக்கவில்லை
"மகளைத் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று நீங்கள் தான் கூறினீர்களா?" என்ற கேள்விக்கு, "நான் எனது மகளின் விஷயத்தில் தலையிடுவதில்லை. அவளுக்கு அனைத்து மேடையும் முக்கியம், எதையும் விட்டுவிடாதே, எல்லா இடங்களிலும் உனது திறமையைக் காட்டு என்று சொல்லிதான் வளர்த்தேன்" என்று உறுதியாகப் பதிலளித்தார்.
உடல்நலக் குறைவும், வதந்திகளும்
சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டபோது, உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார். அப்போது சமூக வலைத்தளங்களில், அவருக்குப் பல்வேறு நோய்கள் இருப்பதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை ரோபோ சங்கர் சமீபத்தில் விவரித்தார்.
"நான் மருத்துவமனையில் இருக்கும்போது, சிலர் நான் இறந்துவிட்டதாக நம்பி என் வீட்டுக்கு மாலையுடன் வந்திருக்கிறார்கள். செய்தி சேனல்களிலும், யூடியூப் சேனல்களிலும் நான் இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதைக் கேள்விப்பட்டு பலர் வீட்டுக்கு வந்ததும் என் மனைவி, எனக்குப் போன் செய்து வருத்தமாக பேசினார், 'மாலை பூ கொண்டு வந்தவங்களிடம், மாலையை அவங்களுக்கே போட்டு அனுப்பு, நான் இப்ப வரேன்' என்று சொல்லியிருந்தேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.
மறுபிறவி
மேலும், "ஒருவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவினால், அவர்களின் மீதமுள்ள வாழ்க்கை மறுபிறவிக்குச் சமம். அதுபோல எனக்குச் சில மறுபிறப்புகள் கிடைத்திருக்கிறது" என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். ரோபோ சங்கரின் இந்த உருக்கமான பேட்டி, ஒரு கலைஞனின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் சவால்களையும், அவனது குடும்பத்தின் மீதான அன்பையும், அவனது மன வலிமையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.












Click it and Unblock the Notifications