ரோகிணி திரையரங்கு பிரச்சனைக்கு மகாலட்சுமியின் கருத்து.. ரசிகர் கேள்வி.. கடுப்பாகி வெளியிட்ட விளக்கம்
சென்னை: நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் பத்து தல பார்ப்பதற்காக டிக்கெட் உடன் சென்ற நரிக்குற பெண்களை அனுமதிக்கவில்லை.
இந்த விவரம் சர்ச்சையான நிலையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்களின் சார்பாக தன்னுடைய கருத்தை சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

ரோகினி தியேட்டர் பிரச்சனை
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். அதிக எதிர்பார்ப்போடு வெளியான இந்த திரைப்படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் முற்றுகையிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் பத்து தல திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற நரிக்குறவ பெண்களை டிக்கெட்டுகள் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை.

வெளியான வீடியோ
இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையானதால் ரோகிணி தியேட்டருக்கு எதிராக பல பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்குப் பிறகு நரிக்குறவ பெண்களை படம் பார்ப்பதற்காக அனுமதித்த தியேட்டர் நிர்வாகம் அதை வீடியோவாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தனர்.

மகாலட்சுமி வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ரோகினி திரையரங்க ஊழியர்களின் மோசமான நடத்தை பற்றி கேள்விப்பட்டதும் நெஞ்சே பதற வைக்கிறது.. ஊடகங்களில் பிரச்சனை பெரிய பிரச்சனையாக மாறிய பிறகு அவர்களை தியேட்டருக்குள் அனுமதித்தனர். அனைவரும் சமமாக நடத்த வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும். இதை கைப்பற்றி முயற்சி எடுத்தவரை பாராட்டுகிறேன் என்று ரோகினி தியேட்டரை டேக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

ரசிகரின் கருத்து
ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் ஒரு ரசிகர், இப்போது சரி.. அவர்கள் தியேட்டருகுள் நுழைந்து உங்கள் அருகில் அமர்ந்தால் நீங்கள் அமைதியாக உட்கார்ந்து படம் பார்ப்பீர்களா? அல்லது அவர்களின் வாசனைக்காக அவர்களுக்கு எதிராக ஒலி எழுப்புவீர்களா? மனிதர்களாகிய நாம் உள்ளுக்குள் மாறி அவர்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். திரையரங்கை ட்ரோல் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

மகாலட்சுமியின் விளக்கம்
அதற்கு மகாலட்சுமி திரையரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல. அது எல்லோருக்கும்.. அவர்கள் அருகில் அமர்ந்து அசௌகரியமாக இருந்தால் நீங்கள் உங்கள் சொந்த தியேட்டரை உருவாக்குவது நல்லது... அல்லது வராதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதற்கு அதே ரசிகர் நீங்கள் அவர்களோடு உட்காருவது சரியா? என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நான் சாதாரண மக்களின் மனநிலையை பற்றி பேசுகிறேன். தியேட்டரை ட்ரோல் செய்வதற்கு முன் நம் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கருத்து தெரிவிக்க, அதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் தான் நான் இதை பதிவிட்டேன் என்று மகாலட்சுமி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications