Sarathkumar: "நாட்டாமை சாதிப்படமா? யார் சொன்னது?"மாரி செல்வராஜ் பற்றி வெளிப்படையாக பேசிய சரத்குமார்
சென்னை: தமிழ் சினிமாவில் சினிமா தாண்டி அரசியலிலும் அழுத்தமானக் கருத்துக்களை பேசிவரும் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது சாதிப் படங்கள் குறித்தக் கேள்விக்கு பதிலளிக்கையில் சற்று டென்ஷன் ஆனார்.
சரத்குமார் பயோகிராபி
சரத்குமார் முதலில் ஒரு ஜர்னலிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் படங்களில் வில்லனாக நடித்து, படிப்படியாக உயர்ந்து, 'சுப்ரீம் ஸ்டார்' என்ற பட்டத்தைப் பெற்றவர். தமிழ் சினிமாவில் 90களில் சண்டைக் காட்சிகள், துப்பறியும் கதாப்பாத்திரங்கள் மற்றும் குடும்பப் பாங்கான வேடங்களுக்குப் பேர் போனவர். அதிலும் அவர் நடித்த நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா போன்ற படங்கள் மூலம் குடும்ப பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார். சினிமாவைத் தாண்டி அரசியலிலும் கால் பதித்தவர் தான்.

சாதிய படங்கள் பற்றிய கேள்வி
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமாரிடம், இன்றுள்ள சமத்துவம் பேசும்கால மாற்றத்தில் 'பைசன்' போன்ற படங்கள் வருவதைக் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. "ஒரு காலத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்றப் படங்கள் வந்தது. சாதிய முரண்பாடுகள் இருந்தாலும், அந்தக் காலத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்த காலத்தில் மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். அப்படியான நிலையில் பைசன் போன்ற படங்கள் வருகிறது. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் அந்த காலத்தில் வந்த சாதிய அடிப்படையிலான படங்களைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?"என்று கேட்கப்பட்டது.
சரத்குமாரின் பதிலடி
இந்த கேள்வியைக் கேட்டதும், சரத்குமார் டக்குனு தன்னுடைய டென்ஷனை வெளிப்படுத்தினார்.பிறகு இது பற்றி பேசும்போது ஜாதிகள் எப்போதும் "கொண்டாட வேண்டியதில்லை. ஆனால், மாரி செல்வராஜ் அவரின் கருத்துகளைச் சொல்கிறார். ஒரு நிகழ்வுகள் நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டுவது தவறு எனச் சொல்ல முடியாது." "ஆனால், நான் நடித்த நாட்டாமை படம் சாதிப்படம் எனச் சொல்கிறீர்களே? அதில் என்ன சாதி இருந்தது? பஞ்சாயத்து பண்ணுவது சாதியில் வருமா?" எனக் கேள்வியெழுப்பினார்.
சரத்குமாரின் கூற்றுப்படி, நாட்டாமை படம் சாதியப் படம் கிடையாது. "அந்தப் படத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவர் தலைவராக, நல்ல தீர்ப்பு வழங்கக்கூடிய மனிதராக வருபவருடையக் கதையாகும். தேவர் மகன் என்பது அந்தப் பகுதியில் படம் எடுத்ததால் அப்படிப் பெயர் வைத்தார்கள். ஆகவே, சாதியை புகுத்த நினைக்கிறார்கள், அதனை வலுவாகச் சொல்கிறார்கள் என நாமாக நினைக்கக்கூடாது. எல்லாரும் மக்களின்ப் பொழுதுபோக்கிற்காகப் படம் எடுக்கிறார்கள். குற்றம் என்ற ஒன்று பார்த்தால், நம்மால் படம் எடுக்க முடியாது" என்று பதிலளித்தார்.
சமத்துவ கருத்து
"என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு எல்லாருமே சமத்துவமாக இருக்க வேண்டும் என நான் சொல்பவன். சாதியைப் பற்றி அழுத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா எனக் கேட்டால், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை அதிக அழுத்தமாக சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால்,நடந்ததை நடந்ததாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் இங்கு ஒற்றுமையாகச் செயல்பட்டுக் கொண்டு, ஒருங்கிணைந்து இருக்கிறோம்" என்று சரத்குமார் வலியுறுத்தினார்.
மேலும், "சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு எல்லாருக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளது. இனிமேல் நடக்கக்கூடாது எனச் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்" என்று தனதுக் கருத்தை நிறைவு செய்தார்.
1994 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம், சரத்குமாரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications