கபடி விளையாட்டுக்காக அப்பா அரிவாளை எடுத்து விரட்டுனாரு! சீமான் சொன்ன கதை! மாரி செல்வராஜ் ரியாக்ஷன்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படத்தை பார்த்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். இந்தப் படத்தின் நேர்த்தியும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் தன்னை அந்த கிராமத்து வாழ்க்கைக்குள் அழைத்து சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜின் பைசன் சாதனை
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பைசன்'. இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், மதன், பசுபதி, அமீர், லால் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். பிரபலக் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் வசூலைக் குவித்துள்ளது.
சீமானின் பாராட்டு
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பைசன்' படத்தைப் பார்த்த பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியபோது, இயக்குநர் மாரி செல்வராஜைப் புகழாரம் சூட்டினார். "என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'பைசன்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' என ஒவ்வொரு படத்திலும் அவரது தளத்தைக் கூட்டி, இதுவரை சொல்லப்படாதக் கதையைச் சொல்லிக் கொண்டே வருகிறார்" என்று புகழாரம் சூட்டினார்.
உணர்ச்சி பதிவு
"பைசன் படத்தை பார்க்கும்போது எனக்கு கோயில் திருவிழாவுக்கு சென்று வந்த மனநிலை உள்ளது. அங்கு சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, ஒவ்வொரு காட்சியும் கடக்கும்போது அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி உள்ளது. படம் ஓடுகிறது என்ற மனநிலை வரவே இல்லை. அதனுள் எல்லா கேரக்டரும் என் பக்கத்தில் வாழும் உணர்வு ஏற்பட்டது" என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தினார்.
அப்பாவின் எதிர்ப்பு
சீமான், 'பைசன்' படத்தை பார்க்கும் அனுபவத்தை, தனது கபடி விளையாட்டுக் காலத்துடன் ஒப்பிட்டுப் பேசியது சுவாரசியமாக இருந்தது. "பரோட்டாவுக்காக ஊர் ஊராகச் சென்று கபடி விளையாடியவர்கள் நாங்கள். 'பைசன்' படத்தை ஒரு ஆய்வாக தான் நான் பார்க்கிறேன். பல நடிகர்களை வைத்து ஒரு இயக்குநர் படம் எடுத்திருக்கிறார் என யாருமே நம்ப மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக இப்படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வசனமும் இந்த் காலத்திற்கும், எதிர்க்காலத்திற்குமானப் படிப்பினையாக உள்ளது. மாரியின் வலி உரையாடல்களாகப் பதிவாகியிருக்கிறது" என்றுப் பாராட்டினார்.
வாழும் பாத்திரங்கள்
"படத்தில் இடம்பெற்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என கூறலாம். எல்லாவற்றையும் விட 'பைசன்' படம் மூலம் மாரி செல்வராஜ் ஜெயித்தது எனக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றும் சீமான் கூறினார். நடிகை ரஜிஷா விஜயனின் நடிப்பை அவர் சிலாகித்து பேசினார். "ஒரு அக்காவாக இல்லாமல் தாயாக இருந்து தம்பியை (துருவ்) உத்வேகப்படுத்தும் காட்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். தனது கபடி விளையாட்டு காலத்தின் மறக்க முடியாத நினைவுகளை சீமான் இந்தச் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு
"எங்க அப்பா நான் கபடி விளையாடச் செல்கிறேன் என்றால் அரிவாளை எடுத்துக் கொண்டு விரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் கபடி விளையாடப் போன இடத்தில்ப் பிரச்சனையாகி விட்டதால், அவருக்குப் பெரிய அளவில் விருப்பமில்லாமல் இருந்தது." "ஆனால், காலப்போக்கில் நான் விளையாடும் விதம் பற்றி மற்றவர்கள் பாராட்டி சொல்ல, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு பிடிப்பு ஏற்பட்டது. 'உன் நண்பர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்கள், நீ கபடி விளையாடப் போ' என சொன்னார்" என்று, தனது தந்தையின் மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படம், பலருக்கும் தங்களின் மண்ணின் நினைவுகளையும், விளையாட்டுக் காலத்தையும் மீண்டும் கொண்டு வந்துள்ளது என்பதை சீமானின் இந்த பேட்டி உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications